தமிழகமும் தாக்கப்படலாம்-ஐபி எச்சரிக்கை, போலீஸ் உஷார்
சென்னை: பெங்களூர், அகமதாபாத் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து தமிழகமும் தாக்கப்படலாம் என உளவுப் பிரிவு எச்சரித்துள்ளதால் மாநிலம் முழுவதும் காவல்துறையினர் மிகவும் விழிப்புடன் பணியாற்ற வேண்டும். எந்தவித அசம்பாவிதமும் நடைபெற இடம் தரக் கூடாது என முதல்வர் கருணாநிதி, காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்திலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் குறி வைக்கப்பட்டிருப்பதாக மத்திய உளவுப் பிரிவு தமிழக அரசை எச்சரித்துள்ளது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மீனாட்சி அம்மன் கோயில் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதேபோல மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய கோவில்களுக்கும் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதல்வர் கருணாநி தலைமையில் காவல்துறை அதிகாரிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் திரிபாதி, டிஜிபி ஜெயின், சென்னை கமிஷனர் சேகர், கூடுதல் டிஜிபி விஜயக்குமார், சென்னை புறநகர் கமிஷனர் ஜாங்கிட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் ஏற்னவே எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்பட்டது. தொடர்ந்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுக்கு முதல்வர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
மக்கள் கூடும் இடங்களில், வழிபாட்டுத் தலங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், மிகுந்த விழிப்புடன் செயல்பட்டு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.