பாதுகாப்பு: உயர்நீதிமன்றத்தில் வாகனங்களுக்கு தடை
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் வக்கீல்கள், பத்திரிக்கையாளர்கள், பிற அதிகாரிகள் உள்ளிட்டோர் தவிர பிறரின் வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் இந்தத் தடை அமலுக்கு வருகிறது.
இதுதொடர்பான முடிவை தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி, நீதிபதிகள் முருகேசன், ரவிராஜ பாண்டியன், நாகப்பன், சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்க தலைவர் பால் கனகராஜ், செயலாளர் வேல்முருகன், மெட்ராஸ் பார் சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பெண் வக்கீல்கள் சங்கத் தலைவர் சாந்தகுமாரி, வக்கீல்கள் சங்கத் தலைவர் கிருஷ்ணகுமார், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சேகர் ஆகியோர் அடங்கிய உயர்மட்ட பாதுகாப்பு கமிட்டி கூடி முடிவெடுத்தது.
இக்கூட்டத்தில் வக்கீல்கள் சங்க பிரதிநிதிகள் காவல்துறையிடம் தெரிவிக்கையில், இதுவரை வக்கீல்கள் சங்கத்தைச் சேர்ந்த 7000 வக்கீல்களின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் குறித்த விவரங்களை தொகுக்கும் பணி நடந்து வருகிறது. ஆகஸ்ட் 14ம் தேதி அனைவருக்கும் புகைப்பட அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்குகிறது.
இக்கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, வக்கீல்கள் அனைவரும் உயர்நீதிமன்ற வளாகத்தை விட்டு இரவு 8 மணிக்குள் வெளியேறி விட வேண்டும். 8.30 மணிக்குப் பிறகு உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் எந்த வாகனமும் நிறுத்தப்படக் கூடாது. வக்கீல்களுக்கும் இது பொருந்தும்.
உயர்நீதிமன்றத்தின் அனைத்து நுழைவாயில்களிலும் மெட்டர் டிடெக்டர் கருவிகள் பொருத்தப்படும். உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள தற்போது உள்ள 230 போலீஸாரின் எண்ணிக்கை உயர்த்தப்படும்.
போலீஸாரின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு வக்கீல்களிடமிருந்து ஒத்துழைப்பு குறைவாக இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
வழக்கு விசாரணைக்காக கோர்ட்டுக்கு வரும் மனுதாரர்களுக்கு பாஸ்கள் வழங்கப்படும்.
உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் வாகனங்கள் நுழையத் தடை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.