மணிப்பூர் மருத்துவமனையில் கையெறி குண்டு சிக்கியது
இம்பால்: நாட்டின் பல்வேறு நகரங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டுகள் சிக்கி வரும் நிலையில், மணிப்பூர் மாநிலத் தலைநகர் இம்பாலில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவமனை வளாகத்தில் கையெறி குண்டு ஒன்று சிக்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூர், அகமதாபாத் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத், ராஜஸ்தானில் அடுத்தடுத்து குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன
இந்த நிலையில் மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவமனை வளாகத்தில் கையெறி குண்டு நேற்று சிக்கியது.
மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒரு முது நிலை டாக்டரின் அறை அருகே இந்த வெடிகுண்டு கிடந்தது. இதைப் பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
போலீஸார், வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து வந்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் கையெறி குண்டை அங்கிருந்து மீட்டு பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்று வெடிக்கச் செய்தனர்.
மருத்துவமனையில் கையெறி குண்டு சிக்கியதைத் தொடர்ந்து இம்பால் மற்றும் மணிப்பூர் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.