மும்பை ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
மும்பை: மும்பையில் உள்ள கல்யாண், அம்பேர்நாத் ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தானேவில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலையில் இதுகுறித்த மிரட்டல் கடிதம் வந்தது. அதில் கல்யாண் மற்றும் அம்பேர்நாத் ரயில் நிலையங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகவும், அவை
வெடித்துச் சிதறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து மோப்ப நாய் படையும், வெடிகுண்டு நிபுணர்களும் அங்கு விரைந்தனர். இரு ரயில் நிலையங்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து அது வெறும் புரளி எனத் தெரிய வந்தது.
இந்த நிலையில், அம்பேர்நாத் காவல் நிலையத்திற்கும் ஒரு மிரட்டல் தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், பெங்களூர், அகமதாபாத்தைத் தொடர்ந்து கல்யாண், அம்பேர்நாத் ரயில் நிலையங்களும் குண்டு வைத்து தகர்க்கப்படும் என தெரிவித்தார்.
இந்த தகவல்கள் புரளியாக இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு ரயில் நிலையங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.