அரசியலுக்கு முழுக்குப் போட சோம்நாத் சாட்டர்ஜி முடிவு
கொல்கத்தா: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால் வேதனையில் மூழ்கியுள்ள லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி அரசியலுக்கு முழுக்குப் போட முடிவு செய்துள்ளதாக அவரது நண்பரும், சோம்நாத்துக்கு முன்பாகவே சிபிஎம்மிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டவரும், ஜனநாயக சமத்துவ கட்சியின் தலைவருமான சைபுதின் செளத்ரி கூறியுள்ளார்.
2000மாவது ஆண்டு, காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமான நட்பு வைத்திருந்ததற்காக முன்பு சோம்நாத் சாட்டர்ஜியும், செளத்ரியும் கட்சி பொலிட்பீரோவால் கண்டிக்கப்பட்டனர். அப்போது சோம்நாத்துக்கு ஜோதிபாசுவின் ஆதரவு இருந்ததால் அவர் மீது பெரிய அளவில் நடவடிக்ைக எடுக்கப்படவில்லை. ஆனால் கட்சியை விட்டு நீக்கப்பட்டார் செளத்ரி. அதன்பின்னர் ஜனநாயக சமத்துவ கட்சி என்ற கட்சியை ஆரம்பித்தார்.
தற்போது சோம்நாத் சாட்டர்ஜியும் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கொல்கத்தா வந்த அவர் செளத்ரியை சந்தித்து மனம் விட்டுப் பேசினார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் சோம்நாத் கொல்கத்தா வருவது இதுவே முதல் முறையாகும்.
சோம்நாத்துடனான சந்திப்பு குறித்து செளத்ரி கூறுகையில், கட்சியில் இருந்து நீக்கியதால் சோம்நாத் சட்டர்ஜி மிகுந்த அதிருப்தியிலும் மனவேதனையிலும் இருப்பதாக என்னிடம் தெரிவித்தார்.
அவர் கடும் கோபமாகவும் இருக்கிறார். அவர் மன உளைச்சலில் இருப்பதை நானும் தெரிந்து கொண்டேன். மேலும், தான் அரசியலில் இருந்து விலக முடிவு எடுத்து இருப்பதாகவும், அதன்பின் சமூக சேவையில் ஈடுபடப் போவதாகவும் என்னிடம் கூறினார்.
அவரிடம் நீங்கள் எந்த அரசியல் விளையாட்டிலும் ஈடுபடவில்லை. நாட்டின் நலனுக்காகத்தான் செயல்பட்டிருக்கிறீர்கள். இந்த நிலையில், நீங்கள் சபாநாயகர் பதவியில் இருந்து விலகி விட வேண்டாம் என நான் கேட்டுக் கொண்டேன்.
தான் எப்போது பதவியில் இருந்து விலகுவேன் என்பது குறித்தோ, அல்லது தனது நீக்கத்தை ரத்து செய்யும்படி கட்சியிடம் கேட்டுக் கொள்வது பற்றியோ அவர் எதுவும் என்னிடம் கூறவில்லை என்றார் அவர்.