குஜராத் குண்டுவெடிப்புக்கு நாங்களே காரணம்: ஹூஜி
அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பில் 49 பேர் பலியானார்கள். இதையடுத்து தற்போது சூரத் நகரில் வெடிக்காத நிலையில் உள்ள குண்டுகள் அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பான விசாரணையை குஜராத் அரசு முடுக்கி விட்டுள்ளது. தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. துப்பு வழங்குவோருக்கு ரூ. 51 லட்சம் பரிசளிக்கப்படும் என முதல்வர் நரேந்திர மோடியும் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில்,இந்த சம்பவத்திற்கு நாங்களே பொறுப்பு என ஹூஜி எனப்படும் ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு அறிவித்துள்ளது. இதுகுறித்து டிவி9 குஜராத்தி தொலைக்காட்சி சேனலுக்கு அது ஒரு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில் கோத்ரா சம்பவத்திற்குப் பழிவாங்கும் வகையில் இதை நிகழ்த்தினோம் என்று ஹூஜி தெரிவித்துள்ளது.
ஹூஜி கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது ..
நாங்கள் தீவிரவாதிகள் அல்ல. உண்மையில், நரேந்திர மோடி, அத்வானி, பிரவீன் தொகாடியா, அஷரம் பாபு ஆகியோர்தான் பூமியிலேயே மிகப்
பெரிய தீவிரவாதிகள்.
ஹூஜி அமைப்பு தீவிரவாத அமைப்பு அல்ல. ஆனால் விஸ்வ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங் தள் மற்றும் பிற இந்து அமைப்புகள்தான் மிகப் பெரிய தீவிரவாத அமைப்புகள்.
மிஷன் குஜராத் என்ற பெயரில் அகமதாபாத்தை தாக்கினோம். அது வெற்றிகரமாக முடிந்துள்ளது. சூரத்திலும் வெடிகுண்டுகளை வைத்தது நாங்கள்தான்.
எந்த இடத்திலும், எப்படிப்பட்ட தாக்குதலையும் நடத்தக் கூடிய வல்லமை எங்களிடம் உள்ளது. எங்களை யாரும் தடுக்க முடியாது.
இந்த கடிதத்தை உங்களது டிவியில் செய்தியாக ஒளிபரப்ப வேண்டும். இல்லாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தக் கடிதம் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் ஷா இ ஆலம் பகுதியிலிருந்து போஸ்ட் செய்யப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீஸார் இக்கடிதம் குறித்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
அல் கொய்தா பாணியில்...
அல் கொய்தா அமைப்பினர் நடத்தும் வெடிகுண்டுச் சம்பவங்களுக்கும், அகமதாபாத் குண்டுவெடிப்புக்கும் சில ஒற்றுமைகள் உள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
அகமதாபாத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 'சிப்'கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இப்படி செயல்படுவது அல் கொய்தா மட்டுமே. எனவே அல் கொய்தாவின் ஆதரவுடன் ஹூஜி இதை நிகழ்த்தியிருக்கலாம் எனத் தெரிகிறது.
மேலும், இந்தோனேசியாவில் தீவிரவாத பயிற்சி பெற்ற தீவிரவாதிகள்தான் அகமதாபாத் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.