கேரளாவில் குவியும் சிமி தீவிரவாதிகள்-உளவுப் பிரிவு!
நாடு முழுவதும் தீவிரவாத அச்சுறுத்தல் இதுவரை இல்லாத அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து பெரும் மிரட்டலை ஏற்படுத்தி நிற்கிறது. ஆங்காங்கு குண்டுகள் வெடிப்பதும், சிக்குவதுமாக மக்கள் அச்சத்தின் பிடியில் சிக்கியுள்ளனர்.
கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் இன்று அனைத்து போலீஸாருமே தீவிரவாத தாக்குதலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டின் பல்வேறு முக்கிய மாநிலங்கள், நகரங்களுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவுப் பிரிவு எச்சரித்து வருகிறது. அந்த வகையில், கேரளாவில் நூற்றுக்கும் மேற்பட்ட சிமி தீவிரவாதிகள் புகுந்திருப்பதாக மத்திய உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது.
கேரளாவில் புகுந்திருக்கும் சிமி அமைப்பினர், ராணுவத்தினருக்கு இணையான பயிற்சியைப் பெற்றுள்ளதாகவும், அதி நவீன ஆயுதங்கள் அவர்கள் வசம் இருப்பதாகவும் உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது.
இதுதவிர டெட்டனேட்டர்கள், பயங்கர நாசத்ைத ஏற்படுத்தும் வெடிபொருட்கள், தானியங்கி அதி நவீன துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றை இவர்கள் வைத்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் என்ன மாதிரியான நாச வேலைகளிலும் ஈடுபடலாம் என்பதால் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேரளஅரசை பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.