நகராட்சி லஞ்ச அதிகாரிகள் மீது ஐகோர்ட்டில் வழக்கு
கும்பகோணம்: கும்பகோணம் நகராட்சியில் உள்ள லஞ்ச அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
கும்பகோணத்தைச் சேர்ந்த பாலு என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது:
எனது மகன் கார்த்திக். அவனுக்கு பிறப்பு சான்றிதழ் கோரி கும்பகோணம் நகர் நல அலுவலகத்துக்குச் சென்றேன். நகர் நல ஆய்வாளர் ரமேஷ்குமார், சூப்பர்வைசர் உத்ராபதி, ஊழியர் முத்துசாமி ஆகியோர் என்னிடம் ரூ.1,200 வரை கேட்டனர்.
நான் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த ஆண்டு 2006. ஆனால், பணத்தை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் கடந்த 2002ம் ஆண்டு துணை தாசில்தார் கையெழுத்திட்ட பிறப்பு சான்றிதழை வழங்கிள்ளனர். அவர்கள் பணம் கேட்ட விவரத்தை சிடியில் பதிவு செய்துள்ளேன்.
அதிகாரிகளின் இந்த போக்கு பொது மக்களை கடுமையாக பாதிக்கிறது. இதுகுறித்து, தமிழக லஞ்ச ஒழிப்பு இயக்குனர், தமிழக உள்துறை செயலாளர் ஆகியோர் விசாரணை நடத்தி லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் அவர் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜோதிமணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி தஞ்சை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி மூன்று வாரத்திற்குள் அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டார்.