கடத்தல்: அரசியலில் இதெல்லாம் சகஜம்-அமைச்சர் ராஜா
ஈரோடு: அரசியலில் இதெல்லாம் (கட்டப் பஞ்சாயத்து புகார்) சகஜம். நாட்டில் எங்கெங்கோ குண்டு வெடிக்கிறது. அதை விட்டு விட்டு என் மீதான வழக்கை மீடியாக்கள் பெரிதுபடுத்துகின்றன என்று கட்டப்பஞ்சாயத்து, கடத்தல், தாக்குதல் புகாருக்குள்ளாகியுள்ள கைத்தறித்துறை அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா காட்டமாக கூறியுள்ளார்.
ஈரோட்டைச் சேர்ந்த பழனிச்சாமி தம்பதியினருக்குச் சொந்தமான பத்து ஏக்கர் பரம்பரை நிலம் மற்றும் வீடு உள்ளிட்ட சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றித் தருமாறு கட்டப்பஞ்சாயத்து செய்தும், ஆட்களை வைத்து அவர்களை கடத்திச் சென்று கொலை மிரட்டல் விடுத்தாகவும் அமைச்சர் ராஜா மீது புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து பழனிச்சாமி தம்பதியினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு போலீஸாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புகாருக்கு விளக்கம் அளிக்குமாறு அமைச்சருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் தன் மீதான புகார் குறித்து அமைச்சர் ராஜா நேற்று செய்தியாளர்களிடம் விளக்கினார். அப்போது அவர் கூறுகையில், அரசியல் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம். நான் எட்டு நாட்களாக ஊரிலேயே இல்லை. வெளியூர் போயிருந்தேன். நேற்றுதான் வந்தேன். நான் ஒரு அமைச்சர். தனியாக போய் எதையும் செய்ய முடியாது. என்னுடன் போலீஸார் இருப்பார்கள்.
இந்த வழக்கு குறித்து கட்சித் தலைமைக்குத் தெரியும். காலையில் கூட அமைச்சர் ஆற்காடு வீராசாமி போனில் பேசினார். சம்பந்தப்பட்ட பெண்மணியை நான் பார்த்ததே இல்லை என்று கூறி விட்டேன்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது பெயரை யாரேனும் பயன்படுத்தியிருக்கலாம். எனது பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை. என்னை யாரும் எதுவும் செய்து விட மாட்டார்கள். எனக்கு நோட்டீஸ் வரவில்லை. வந்தால் பதிலளிப்பேன்.
நாட்டில் எங்கெங்கோ குண்டு வெடிக்கிறது. அதை விட்டு விட்டு என் மேல் போடப்பட்ட வழக்கு குறித்து டிவிகளும், பத்திரிகைகளும் செய்தி வெளியிடுகின்றன என்றார் ராஜா.












Click it and Unblock the Notifications