பொறுப்பில்லாத காரத்- சோம்நாத் தாக்கு
டெல்லி: பதவிகாலம் முடியும் வரை சபாநாயராக தொடர்ந்து நீடிப்பேன் என்று கூறி மௌனம் கலைத்துள்ளார் சோம்நாத் சட்டர்ஜி.
அணு ஒப்பந்த விவகாரத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் வாபஸ் பெற்றன. இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு கடந்த 22ம் தேதி நடந்தது.
இதற்கிடையில் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்யும்படி சோம்நாத் சட்டர்ஜிக்கு மார்க்சிஸ்ட் கட்சி நெருக்கடி கொடுத்தது. ஆனால் வெற்றி கரமாக வாக்கெடுப்பை நடத்தி முடித்தார் சோம்நாத். இதையடுத்து அவரை கட்சியில் இருந்து நீக்கி மார்க்சிஸ்ட் கட்சி உத்தரவி்ட்டது.
இதனால் சோம்நாத் வருத்தமடைந்தார். இந்நிலையில் அவர் தொடர்ந்து சபாநாயகராக நீடிப்பாரா என்ற கேள்வியும், சோம்நாத்தின் மௌனம் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.
சில தினங்களுக்கு முன் கொல்கத்தா சென்ற சோம்நாத் அவருடைய நண்பரும் கடந்த 2000ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவருமான சைபுதீன் சௌத்ரியை சந்தித்தார்.
சோம்நாத், கட்சியின் நடவடிக்கையால் அதிருப்தியும், மன உளைச்சலும் அடைந்திருப்பதாகவும் சைபுதீன் தெரிவித்தார்.
முன்னதாக கடந்த 28ம் தேதி டெல்லியில் இருந்து கொல்கத்தாவுக்கு புறப்படும் முன் சோம்நாத் கூறுகையில், மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து நான் நீக்கப்பட்டது குறித்து மக்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். அவர்களே அதை தீர்மானிக்கட்டும். இந்த விவகாரத்தில் எனது கருத்தை சில நாட்கள் கழித்து கூறுகிறேன் என்று கூறினார்.
இந்நிலையில் சோம்நாத் இன்று மௌனம் கலைத்துள்ளார். அவர் கூறுகையில், பதவியில் தொடர்ந்து நீடிப்பேன். மார்க்சிஸ்ட் கட்சி என்னை வழி நடத்த முடியாது. பிரகாஷ் காரத் பொறுப்பில்லாமல் செயல்படுகிறார்.
சபாநாயகர் பதவிக்கான கடமைகளையும் பொறுப்புகளையும் கண்டிப்பாக நிறைவேற்றுவேன். பதவிகாலம் முழுவதும் நீடித்து இருந்து பணியாற்றுவேன். நாட்டு நலனுக்கு கட்சிக்கு எதிராக முடிவு எடுத்துள்ளேன்.
என்னை கட்சியை விட்டு நீக்கிய தினம் தான் என் வாழ்க்கையிலேயே மிகவும் வருத்தமான நாள் என்றார்.
தனது சுயநலத்துக்காகவும், சில கட்சிகளுக்காகவும் இந்த பதவியில் அவர் நீடிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை அவர் கடுமையாக மறுத்தார்.