கூடியது ஐஏஇஏ-இந்திய அணு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல்?
இந்தியாவின் வரைவு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் தருவதற்கான சர்வதேச அணு சக்தி ஏஜென்சியின் போர்டு உறுப்பினர்கள் கூட்டம் இன்று வியன்னாவில் தொடங்கியது.
35 நாடுகளின் உறுப்பினர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தைத் தொடங்கி வைத்து எல் பராதே பேசுகையில், பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யும்வகையில் இந்தியாவின் வரைவு ஒப்பந்தம் உள்ளது.
இந்தியாவின் தேவைகளை மட்டுமல்லாது அணு சக்தி ஏஜென்சியின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இந்த ஒப்பந்தம் உள்ளது.
அணு உலைகளின் பாதுகாப்பு தொடர்பான சிறந்த கட்டமைப்பை இந்தியா கொண்டுள்ளதை இது உறுதி செய்கிறது.
இந்த ஒப்பந்தப்படி இந்தியாவின் 14 அணு உலைகள், ஏஜென்சியின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படும். 2014ம் ஆண்டுக்குள் இவை ஏஜென்சியின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்டும். இவற்றில் 6 அணு உலைகள் ஏற்கனவே அணு சக்தி ஏஜென்சியின் மேற்பார்வையின் கீழ் உள்ளன.
மற்ற அணு உலைகளில் ஏஜென்சியின் கண்காணிப்பு 2009ம் ஆண்டு முதல் தொடங்கும். இதுதொடர்பான நடவடிக்கைளை படிப்படியாக இந்தியா, ஏஜென்சிக்குத் தெரிவிக்கும். ஏஜென்சி தனது உறுப்பினர்களுக்கு இவற்றைத் தெரிவிக்கும்.
அடிஷனல் புரோட்டோகால் குறித்த விவாதங்களை ஏற்கனவே இந்தியாவும், சர்வதேச அணு சக்தி ஏஜென்சியும் தொடங்கி விட்டன என்றார் எல்பராதே.
இந்தியாவின் பாதுகாப்பு அம்சம் தொடர்பான வரைவு ஒப்பந்தத்திற்கு இன்றைய கூட்டத்தில் ஒப்புதல் தரப்படும் எனத் தெரிகிறது. ஒப்பந்தத்திற்கு வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா (இன்றுதான் தனது ஆதரவை ஆஸ்திரேலியா தெரிவித்தது), பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள வழங்கியுள்ளதால் ஒப்பந்தம் எந்தவித சிக்கலுமின்றி ஒப்புதல் பெற்று விடும் எனத் தெரிகிறது.