மழை மழை-மேட்டூருக்கு நீர்வரத்து கிடுகிடு அதிகரிப்பு
திருச்சி: மேட்டூர் அணைக்கு அபரிமிதமான நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது.
கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்துவருகிறது. இதனால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
ஹோரங்கி, கபிணி ஆகிய அணைகள் நிரம்பியுள்ளன. இதனால் அவற்றுக்கு வரும் உபரி நீர் கிருஷ்ண ராஜசாகருக்கு திருப்பி விடப்பட்டு வருகிறது.
இந்த உபரி நீரை கர்நாடக அதிகாரிகள் திறந்து விட்டு வருகின்றனர். இதன் காரணமாக அந்த நீர் மேட்டூரை நோக்கி வந்து கொண்டுள்ளது. இதனால், ஓகனேக்கல் அருவிப் பகுதியில், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 23 ஆயிரத்து 137 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 12 ஆயிரத்து 94 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
காவிரி மூலமாக 5501 கன அடி நீரும், வெண்ணாற்றிலிருந்து 510 கன அடி நீரும், பெரிய அணைக்கட்டு கால்வாய் மூலம் 2306 கன அடி நீரும், கல்லணை வழியாக 800 கன அடி நீரும் பாசனத்திற்கு திறந்து விடப்படுகிறது.