துருக்கியில் காஸ் குழாய் வெடித்து 15 மாணவர்கள் பலி
இஸ்தான்புல்: துருக்கி நாட்டில் உள்ள விடுதியில் காஸ் குழாய் வெடித்து 15 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர். பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
துருக்கியிலுள்ள கொன்யா மாகாணத்தில் மாணவர்கள் விடுதி உள்ளது. இந்த விடுதியில் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் விடுதியில் உள்ள காஸ் குழாய் திடீரென்று வெடித்தது.
இதில் 15 மாணவர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
இதில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. குழாய் எப்படி வெடித்தது என்பது குறித்து தெரியவில்லை.
மாணவர்களின் பெற்றோர்கள் கதறி அழுதனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.