இமாச்சல பிரதேச கோவில் கூட்ட நெரிசல் பலி 150 ஆனது
பிலாஸ்பூர் (இ.பி): இமாச்சல பிரதேச மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது. 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தால் பிலாஸ்பூர் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
இமாசல பிரதேசம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ளது நைனாதேவி கோவில். இந்த கோவிலில் சிரவண உற்சவம் நடக்கிறது. நேற்று நடந்த உற்சவத்தில் கலந்து கொள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கு குவிந்தனர்.
அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. அருகில் உள்ள மலையில் நிலச்சரவு ஏற்பட்டதால் பெரிய கற்கள் உருண்டு வருவதாக கூட்டத்தினரிடையே வதந்தி பரவியது. இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 30 குழந்தைகள் உள்பட 150 பக்தர்கள் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
மலைப் பாதையில் இந்த கோரச் சம்பவம் நடந்துள்ளது. கோவிலுக்குப் போவதற்காக மலைப் பாதையில் தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. அதை உடைத்துக் கொண்டு பலர் மலையிலிருந்து உருண்டு விழுந்து உயிரிழந்துள்ளனர்.
பெண்கள், குழந்தைகள் என மிகக் கோரமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 90 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இறந்தவர்களில் 50 பேர் குழந்தைகள் என்பது பரிதாபமாக உள்ளது. இறந்தவர்களில் பலர் பஞ்சாப், ஹரியாணாவைச் சேர்ந்தவர்கள்.
பலத்த மழை கொட்டியதால் மீட்புப் பணி பாதிக்கப்பட்டது. கடும் சிரமத்திற்கு மத்தியில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பினர். உடல்களை மீட்பதிலும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
நிவாரணம்: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சமும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000மும், காயமடைந்தவர்களுக்கு ரூ.25,000மும் வழங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.