சட்டீஸ்கர்: 3 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்
ஜக்தல்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் 2 பைலட் மற்றும் இன்ஜினியருடன் புறப்பட்ட ஹெலிகாப்டர் திடீரென்று மாயமானது. மோசமான வானிலை நிலவுவதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
ரெய்னா ஏர்லைன்ஸ் என்ற தனியார் நிறுவனத்திடம் இருந்து சட்டீஸ்கர் மாநில அரசு ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளது. இந்த ஹெலிகாப்டர் ஹைதராபாத்தில் இருந்து ராய்ப்பூருக்கு நேற்று மதியம் 3 மணிக்கு புறப்பட்டது. இந்த ஹெலிகாப்டரில் 2 பைலட்டுகள் மற்றும் இன்ஜினியர் ஒருவரும் புறப்பட்டனர்.
பயணத்துக்கு இடையில் மாலை 4.30 மணிக்கு ஜக்தல்பூருக்கு வந்து எரிபொருள் நிரப்பி செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. ஜக்தல்பூரில் அதிகாரிகள் ஹெலிகாப்டருக்காக காத்திருந்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் ஹெலிகாப்டர் வரவில்லை. வராதது குறித்து எந்த தகவலும் வரவில்லை. இதையடுத்து ஹெலிகாப்ரையும் அதில் பயணம் செய்தவர்களையும் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜஜி ஏ.என்.உபாத்யாயா கூறுகையில், திட்டமிட்டபடி ஹெலிகாப்டர் வரவில்லை. சட்டீஸ்கர் மற்றும் ஆந்திர மாநில எல்லைகளில் வானிலை மோசமாக உள்ளது. இதனால் ஹெலிகாப்டருக்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை. தொடர்ந்து தேடுதல் பணி நடந்து வருகிறது என்றார்.
இந்த ஹெலிகாப்டர் முதல்வர் ராமன்சிங் மற்றும் உள்துறை அமைச்சர் ராம்விசார் நிதம் ஆகியோருக்காக வாடகைக்கு எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. மற்றொரு தகவலில், தெற்கு பஸ்டர் பகுதியில் நக்சலைட்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படையினருக்கு உணவு கொண்டு செல்ல இந்த ஹெலிகாப்டர் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மாயமான அந்த ஹெலிகாப்டர் குறித்து இதுவரை எந்த தகவலும் தெரியவில்லை. அதில் பயணம் செய்த 3 பேரின் நிலை என்ன என்றும் தெரியாததால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதமும் சட்டீஸ்கர் மாநில அரசுக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று, போபாலில் இருந்து ராய்ப்பூருக்கு செல்லும்போது விபத்துக்குள்ளானது. மோசமான வானிலை காரணமாக நடந்த இந்த விபத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
ராஜ்நந்தகான் மாவட்டத்தில் உள்ள ஹிலாக் அமீத் என்ற காட்டுப்பகுதியில் விழுந்து நொறுங்கிக் கிடந்த ஹெலிகாப்டரை வீட்டில் வளர்க்கப்பட்ட செல்ல நாய் மூலம் போலீசார் கண்டுபிடித்தனர்.