சோம்நாத் நீக்கம் துரதிர்ஷ்டம்-பிரகாஷ் காரத்
டெல்லி: சோம்நாத் சட்டர்ஜியை கட்சியில் இருந்து நீக்கியது துரதிர்ஷ்டவசமான முடிவு என்கு மாக்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.
தனியார் டிவி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், சோம்நாத் சட்டர்ஜின் நீக்கம் குறித்து கூறியதாவது: சோம்நாத்தை கட்சியில் இருந்து நீக்கப்பட்டது மிகவும் துரதிர்ஷவசமான நிகழ்வு. ஆனால் கட்சி கட்டுப்பாட்டை காப்பதில் உறுதியாக இருப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.
இதுபோன்ற நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு வராது. அதுவும் சோம்நாத் சட்டர்ஜி போன்ற பொறுப்பான இடத்தில் இருப்பவருக்கு எதிரான இந்த நடவடிக்கை துரதிர்ஷ்டவசமானதுதான்.
சபாநாயகர் பதவியை மிகவும் மதிக்கிறோம். அந்த பதவிக்கு பங்கம் விளைவிக்கும் விதத்தில் நடவடிக்கை எடுக்கவோ அல்லது கருத்து தெரிவிக்கவோ விரும்பவில்லை என்பதை ஏற்கனவே தெளிவுபட கூறியிருக்கிறேன்.
கட்சி தாவல் அல்லது தகுதி இழப்பு தொடர்பான கேள்விகளுக்குள் செல்ல விரும்பவில்லை. சபாநாயகர் பதவியில் நீடிப்பது என்பது அவரது முடிவு. கட்சி உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவது என்பது கட்சி முடிவு.
கடந்த 21,22ம் தேதிகளில் நடந்த நம்பிக்கை தீர்மான விவாதம் மற்றும் வாக்கெடுப்பின்போது சபாநாயகர் பதவியில் நீடிப்பது என்று அவர் முடிவு செய்தபோதே அவருடனான தொடர்பை துண்டித்துக் கொள்ள நாங்கள் முடிவு செய்துவிட்டோம்.
சபாநாயகர் பதவியை பொறுத்தவரையில் இந்தியாவில் உள்ள நடைமுறை வேறு. இங்கிலாந்தில் உள்ள நடைமுறை வேறு. இரண்டையும் ஒப்பிடுவது சரியல்ல. இந்தியாவின் சபாநாயகராக ஆகி பாரபட்சமற்ற முறையில் அவர் செயல்பட்டு வந்தாலும் கட்சியுடன் அவருக்கு உள்ள தொடர்பு நீடித்து வருகிறது.
லோக்சபாவின் முன்னாள் சபாநாயகர்கள் சிவராஜ் பாட்டீல், பி.ஏ.சங்மா, மனோகர் ஜோஷி ஆகியோர் தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொடர்பை முறித்துக் கொள்ளவில்லை. சபாநாயகர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னரும் அவர்கள் தங்கள் கட்சியுடனான தொடர்பை விட்டுவிடவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்றார்.