அருண் ஜேட்லி அனுப்பிய ரூ. 1 கோடி-அமர்சிங் தரப்பு பதில் சிடி
இந்த விவகாரத்தில் அருண் ஜேட்லிக்கு உள்ள தொடர்பை விளக்கும் புதிய சிடியும் வெளியிடப்பட்டுள்ளது.
இன்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், பொதுச் செயலாளர் அமர்சிங், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், லோக் ஜன் சக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் இன்று ஒரு சிடியை வெளியிட்டனர்.
மக்களைவையில் கொட்டப்பட்ட ரூ.1 கோடி
கடந்த மாதம் 22ம் தேதி மக்களவையில் மத்திய அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது பாஜக எம்பிக்கள் பங்கன்சிங் குலாஸ்தே, அசோக் ஆக்ரால், மகாவீர் பகாரே ஆகியோர் நாடாளுமன்றத்தில் ரூ. 1 கோடியை கொண்டு வந்து கொட்டினர்.
காங்கிரஸ் அரசைக் காப்பாற்ற, தங்களை விலைக்கு வாங்க சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங் சார்பில் இந்தப் பணம் அட்வான்ஸ் பணம் தரப்பட்டதாகவும், தங்களுக்கு மேலும் தலா ரூ. 3 கோடி தருவதாக பேரம் பேசப்பட்டதாகவும் அவர்கள் புகார் கூறினர்.
இது தொடர்பான வீடியோ ஆதாரம் சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சியிடம் இருப்பதாகவும் கூறினர். ஆனால், அதை அந்த சேனல் ஒளிபரப்பவில்லை, சபாநாயகரிடம் ஒப்படைத்துவிட்டது.
இதனால் அந்த சேனலை பாஜக புறக்கணித்து வருகிறது.
இந் நிலையில் இன்று இந்த ஒட்டு மொத்த பணம், வீடியோ ஆதாரம் எல்லாமே அருண் ஜேட்லி நடத்திய நாடகம் தான் என முலாயம், லாலு, பாஸ்வான் ஆகியோர் குற்றம் சாட்டி அது தொடர்பான ஆதாரத்தையும் இன்று வெளியிட்டனர்.
அவர்கள் கூறுகையில், மத்திய அரசைக் கவிழ்க்க வேண்டும் என பாஜக நடத்திய சதி தான் பணம்-அது தொடர்பான போலி சிடி எல்லாமே. இதன்மூலம் காங்கிரஸ் கூட்டணி பெயரைக் கெடுக்க முனைந்தனர். ஆனால், நாடாளுமன்றத்தை பணத்தைக் கொட்டி நாட்டின் மாண்பையும் மானத்தையும் பாஜக காற்றில் பறக்கவிட்டுவிட்டது. பதவிக்காக பாஜக எதையும் செய்யும் என்பதற்கு இது இன்னொரு உதாரணம்.
நாங்கள் இப்போது வெளியிட்டு்ள்ள இந்த சிடி பாஜக எம்பி பங்கன்சிங் குலாஸ்தேவை ரகசியமாக கண்காணித்து எடுக்கப்பட்ட வீடியோ.
இதில் சஞ்சீவ் சக்ஸேனாவிடம் (இவர் அமர்சிங்கின் முன்னாள் உதவியாளர், இவர் மூலமாகத்தான் அமர்சிங் தங்களுக்கு பணம் தந்ததாக பாஜக எம்பிக்கள் கூறினர்), அருண் ஜேட்லி பணம் தந்ததும், அதை அமர்சிங்கின் பெயரில் பாஜக எம்பிக்களிடம் சக்ஸேனா வழங்கியதும் உறுதியாகிறது.
பணத்தை அமர்சிங் தான் தந்தார் என்றால் உடனே அதை போலீசிடம் தந்திருக்கலாமே. அதிலுள்ள கைரேகைகளை பதிவு செய்து பணத்தை கையாண்டது யார் என்பது தெளிவாகியிருக்குமே. அதை பாஜக ஏன் செய்யவில்லை.
இந்த விஷயத்தில் உண்மையை கண்டறிய பாஜக எம்பிக்களிடம் நார்கோ அனாலிஸிஸ் சோதனை நடத்த வேண்டும்.
மக்களவையில் அரசின் மீதான விவாதம் நடந்து கொண்டிருந்தபோது நீண்டநேரம் அத்வானியையே காணோம். அவருக்கும் கூட இந்த பணம்-சதி சிடியில் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். காங்கிரஸ் அரசை கவிழ்க்கிறோம் என நாட்டின் மானத்தை வாங்கிய பாஜக ஒரு பாஸிஸ சக்தி.
மிகவும் திட்டம் போட்டுத்தான் பணத்தை நாடாளுமன்றக்குக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். இதன் பின்னணியில் பெரிய சதி அடங்கியிருக்கிறது.
மேலும் சிஎன்என்-ஐபிஎன்னிடம் உள்ள சிடியின் காப்பி தங்களிடமும் இருப்பதாக பாஜக சொல்கிறது. அதை ஏன் பணத்துடன் சேர்த்து உடனடியாக சபாநாயகரிடம் பாஜக தரவில்லை?.
அதை நேற்றுத்தான் வெளியிட்டிருக்கிறார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் அந்த சிடியில் பாஜகவினர் எடிட்டிங் செய்தி்ருக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
சஞ்சீவ் சக்ஸேனாவுக்கும் அமர்சிங்குக்கும் இப்போது எந்த சம்பந்தமும் இல்லை. அவர் அமர்சிங்கின் உதவியாளராக பணியாற்றியதும் இல்லை. அவர் ஒரு தனியார் நிறுவன ஊழியர், ஒரு காலத்தில் அமர்சிங்குக்கு உதவியாக இருந்தவர். அவ்வளவு தான்.
நேற்று பாஜக வெளியிட்ட சிடியில் அமர்சிங்கின் வீட்டிலிருந்து ஒரு கருப்பு தான் வெளியில் வருகிறது. அதில் சக்ஸேனாவும் மாயாவதி தரப்புக்கு தாவிய சமாஜ்வாடி எம்பி சித்திகியும் இருப்பதாக காட்டவே இல்லை. இது எப்படி அமர்சிங்குக்கு எதிரான ஆதாரமாகும்?.
இந்த முழு சிடியுமே அருண் ஜேட்லி கதை, வசனம், திரைக்கதை எழுதிய ஒன்று.
மேலும் அமர்சிங்கிடம் இருந்து சஞ்சீவ் சக்ஸேனா பணத்தை கொண்டு வந்து பாஜக எம்பிக்களிடம் தந்தபோது அவரை கையும் களவுமாகப் பிடித்து போலீசிடம் ஒப்படைத்திருக்க வேண்டியது தானே.
மேலும் அந்த வீடியோவை சிஎன்என்-ஐபிஎன் வெளியிடாமல் இருப்பது ஏன்?.