எம்டிஎன்-ரிலையன்ஸ்: மீண்டும் பேசுகிறார்கள்!
மும்பை: அம்பானி சகோதர்ர்களின் சண்டையால் முறிந்து போனதாக அறிவிக்கப்பட்ட ரிலையன்ஸே கம்யூனிகேஷன்ஸ் – எம்டிஎன் நிறுவனப் பேச்சு வார்த்தைகள் மீண்டும் துவங்கப்பட்டுள்ளன.
தென்னாப்பிரிக்காவின் நம்பர் ஒன் தொலைத் தொடர்பு நிறுவனமான எம்டிஎன்னின் பங்குகளை வாங்க முகேஷ் –அனில் அம்பானிகள் கடுமையாக மோதிக் கொண்டனர்.
இந்த விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி உள்பட பலரும் தலையிட்டு, சகோதரர்களுக்குள் சமாதானம் ஏற்படுத்த முயன்றனர்.
இந்த வில்லங்கமான ஒப்பந்தமே வேண்டாம் என முடிவு செய்த எம்டிஎன் இயக்குநர்கள் மற்றும் பங்குதாரர்கள், பேச்சுவார்த்தையை முறித்துக் கொள்ளலாம் எனக் கூறியதைத் தொடர்ந்து, பார்தி ஏர்டெல்லுக்கு பங்குகளை விற்கப் போவதாக எம்டிஎன் அறிவித்துவிட்டது. ஆனால் பார்தியுடன் நடத்தப்பட்ட பேச்சுகள் ஆரம்ப நிலையிலேயே முறிந்துவிட்டன.
அதற்குள் அம்பானிகளின் சண்டையும் தணிந்துள்ளது. எனவே அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் மீண்டும் இணைப்புக்கான பேச்சுக்களைத் துவங்கியுள்ளது எம்டிஎன்.
ஆகஸ்ட் 28-ம் தேதிக்குள் இப் பேச்சு வார்த்தையில் ஒரு முடிவு எட்டப்பட வேண்டும் என எம்டிஎன் இயக்குநர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.