மீனவர்கள் கச்சத்தீவில் மீன் பிடிக்க ஐடி கார்ட்!
சேலம்: கச்சத்தீவு உள்ளிட்ட இலங்கையின் கடல் எல்லைக்குள் சென்று தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு ஐடி கார்டு வழங்கப்படும். இலங்கை அரசுடன், மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் இதுகுறித்த உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார்.
சேலம் வந்த தங்கபாலு அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழக கடல் பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து, பிரதமரின் கவனத்துக்கு கொண்டு சென்று அதில் உறுதியான நடவடிக்கை எடுத்து மீனவர்களை காப்பாற்ற கோரிக்கை வைத்தேன்.
பின்னர் தமிழ்நாட்டை சேர்ந்த காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் உள்பட அனைத்து எம்.பி.க்களும் பிரதமரை சந்தித்து வலியுறுத்தினோம்.
முதல்-அமைச்சர் கருணாநிதி டெல்லி சென்றபோது, பிரதமரிடம் இதுபற்றி பேசி தமிழக மீனவர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தார். அப்போது பிரதமர் மன்மோகன் சிங், இலங்கையில் நடைபெறும் சார்க் மாநாட்டில் பங்கேற்க செல்லும்போது இது குறித்து இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
பிரதமர் நமக்கு அளித்த உறுதிமொழியின்படி, தற்போது பிரதமரும், அவருடன் சென்ற அதிகாரிகள் குழுவினரும் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதில் நமக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்து உள்ளது. தமிழக மீனவர்கள் கடலில் பாதுகாப்பாக மீன் பிடிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அவர்கள் இந்திய கடல் எல்லை பகுதியில் மட்டுமல்லாமல் இலங்கை கடல் பகுதியிலும் சென்று மீன் பிடிக்க அனுமதி பெறுவதில் மத்திய அரசு வெற்றி பெற்று உள்ளது. அதற்காக அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க உள்ளதாகவும் எனக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
தமாகாவினர் மீது நடவடிக்கை:
சில பகுதிகளில் தமிழ் மாநில காங்கிரஸ் தொடங்கப்பட்டுள்ளதாக சிலர் அறிவித்து, கட்சி தலைமை எடுத்த முடிவுக்கு எதிராக செயல்படுகிறார்கள். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கலைக்கப்பட்டு அது காங்கிரசுடன் இணைக்கப்பட்டு விட்டது.
எனவே கட்சி தலைமை எடுத்த முடிவுக்கு எதிராக யார் நடந்தாலும் அவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெறுவது பற்றி நான் தனிப்பட்ட முறையில் எந்த முடிவும் எடுக்க முடியாது. காங்கிரசாரின் கருத்துகள், டெல்லியில் உள்ள கட்சி தலைமையிடம் தெரிவிக்கப்படும். தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதன்படி செயல்படுவோம் என்றார் அவர்.