கும்பகோணத்தில் குசேலன் பட பேனர்கள் கிழிப்பு
கும்பகோணம்: கும்பகோணத்தில் குசேலன் பட பேனர்களை சிலர் நள்ளிரவில் கிழித்து சேதப்படுத்தினர்.
சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் தான் பேசியது குறித்து கன்னட மக்களிடம் சமீபத்தில் வருத்தம் தெரிவித்துப் பேசியிருந்தார் ரஜினிகாந்த்.
இதையடுத்து கர்நாடகத்தில் ஆகஸ்ட் 1ம் தேதி குசேலன் படம் தடையின்றி திரையிடப்பட்டது. இதற்கு தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த சிலர் ரஜினிக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். அதேபோல பாமகவைச் ேசர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னுச்சாமியும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கும்பகோணத்தில் குசேலன் பட பேனர்களை சிலர் நள்ளிரவில் கிழித்து சேதப்படுத்தினர். தகவல் அறிந்த ரஜினி ரசிகர்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்தனர். பேனர்களை கிழித்தவர்களுக்கு எதிராரக கடும் கோஷம் போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் பேனர்களை கிழித்த மர்ம நபர்களை உடனே கைது செய்யக் கோரி ரஜினி மன்ற ஒன்றிய தலைவர் இன்பராஜ், நகரத் தலைவர் கண்ணன் ஆகியோர் கும்பகோணம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
பேனர்களை கிழித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.