சிபு சோரனுக்கு ஜார்க்கண்ட் முதல்வர் பதவி
மக்களவையில் மத்திய அரசி் மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தபோது 5 எம்.பிக்களை கொண்ட சிபுசோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அரசுக்கு ஆதரவு தர தயங்கியது.
தனக்கு மத்திய அமைச்சர் பதவி அல்லது ஜார்க்கண்ட் மாநில முதல்வர் பதவி வேண்டும் என நிபந்தனை விதித்தார்.
அதை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டதையடுத்து அவர் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தார்.
இந் நிலையில் அவரை மத்திய அமைச்சராக்க காங்கிரஸ் முயன்றது. ஆனால், தனக்கு ஜார்க்கண்ட் முதல்வர் பதவி வேண்டும் என கோரி வருகிறார் சிபு.
இப்போது அந்த மாநிலத்தில் மது கோடா முதல்வராக உள்ளார். சுயேச்சையான இவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளி்ன் ஆதரவுடன் முதல்வராக உள்ளார்.
இப்போது சிபுசோரன் முதல்வர் பதவியைக் கேட்பதால் அவரிடம் மது கோடாவிடம் காங்கிரஸ் பேச்சு நடத்தியது. இதையடுத்து சோரனுக்காக முதல்வர் பதவியை விட்டுத் தரத் தயார் என மது கோடா அறிவித்துள்ளார்.
அவர் கூறுகையில்,
நான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் முதல்வராக இருக்கிறேன். இதுவரை என்னை பதவி விலகும்படி கூட்டணி கட்சிகள் சார்பில் சொல்லவில்லை. சிபு சோரனுக்காக பதவி விலகும்படி கூறும்போது என்னால் அதை மறுக்க முடியாது.
அரசியலில் பல ஏற்றத் தாழ்வுகளை பார்த்தவன். சுயேச்சையான நான் இன்று முதல்வராகி 22 மாதம் வெற்றிகரமாக ஆட்சியை நடத்திவிட்டேன்.
என்னை வீழ்த்த பாஜக பல்வேறு வழிகளில் முயற்சிக்கிறது. ஆனால், அவர்களுக்கு தோல்வியே கிடைக்கும். காங்கிரஸ் கூட்டணி எந்த கட்டளையிட்டாலும் அதை ஏற்பேன் என்றார்.