கேரளாவிலிருந்து லாரி நிறைய வெடிபொருள்- தமிழகத்தை தாக்க சதி
நெல்லை: தமிழகத்தின் முக்கிய நகரங்களை தகர்க்க கேரளாவில் இருந்து லாரி நிறைய வெடிபொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் பிடியில் உள்ள தீவிரவாதிகள் பகீர் தகவலை வெளியிட்டுள்ளனர்.
சுதந்திர தினத்தன்று தமிழகத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த தீவிரவாதிகள் அலி அப்துல்லா, ஹீரா, அப்துல் கபூர் ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். நெல்லையில் அவர்களிடம் போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் தமிழகத்தின் முக்கியமான 10 நகரங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதை அலி அப்துல்லாவின் கூட்டாளிகள் 25 பேர் செய்து முடிப்பார்கள் என்று தீவிரவாதிகள் கூறியுள்ளனர்.
பெங்களூரில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட இமாம் அலியின் கூட்டாளிகள் 10 பேர், அலி அப்துல்லாவின் கூட்டாளிகளுடன் கூட்டு சேர்ந்து சதித்திட்டத்தை அரங்கேற்ற திட்டம் தீட்டியுள்ளனர்.
சுதந்திர தினத்துக்குள் இவர்களை பிடிக்க மத்திய மற்றும் மாநில உளவுத்துறையினர் தமிழகம் மற்றும் கேரளாவின் பல பகுதிகளில் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
தாக்குதலை நெல்லையில் இருந்து தொடங்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். நெல்லை கலெக்டர் அலுவலகம், நெல்லையப்பர் கோவில், மாநகராட்சி அலுவலகம், தென்காசி டி.எஸ்.பி. அலுவலகம் மற்றும் பல இடங்களை தேர்வு செய்துள்ளனர்.
அதே சமயத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம், அண்ணா மேம்பாலம் ஆகியவற்றை குறி வைத்துள்ளனர். மிகவும் சக்தி வாய்ந்த குண்டு வைத்து அண்ணா மேம்பாலத்தை அடியோடு தகர்க்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். தாக்குதலின் ஒரு பகுதியாக மதுரை மீனாட்சியம்மன் கோவிலையும் குறி வைத்துள்ளனர்.
லாரி நிறைய வெடி பொருள்-பகீர் தகவல்:
இந்நிலையில், ஹைதராபாத் மற்றும் கேரளாவில் உள்ள சிமி அமைப்பினர், தமிழகத்தை தகர்க்க தீவிரவாதிகளுக்கு உதவியிருப்பதும் தெரிவந்துள்ளது. தாக்குதலுக்குத் தேவையான வெடி பொருட்களை சப்ளை செய்திருப்பதும், லாரி ஒன்றில் வெடிபொருட்களை ஏற்றி தமிழகத்துக்கு அனுப்ப இருப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதற்காக கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிமி இயக்கத்தவரால் ஒரு லாரி நிறைய வெடிகுண்டுகள் பெங்களூரில் இருந்து புறப்பட்டுள்ளது. பெட்ரோல் டேங்க் போல் வடிவமைக்கப்பட்ட இந்த லாரிக்குள் ஏராளமான வெடிகுண்டுகள், டைமர் கருவிகள் வைக்கப்பட்டு கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
வரும் 15ம் தேதிக்கு முன்னதாக திருவனந்தபுரத்தில் இருந்து இந்த லாரியை செங்கோட்டை வழியாக நெல்லை மாவட்டத்திற்குள் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. நெல்லையில் சதித்திட்டதைத அரங்கேற்றுவதற்காக அப்துல் கபூரும், ஹீராவும் நெல்லையில் இருக்கும்படி முன்னேற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதற்குள் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துவிட்டனர்.
வெடிகுண்டு லாரியை தேடும் பணி கேரளாவில் நேற்று நள்ளிரவு முதல் தொடங்கி விட்டது. திருவனந்தபுரம், கொல்லம், புனலூர் பகுதிகளில் போலீசார் ஒவ்வொரு லாரியாக சோதனை செய்து வருகின்றனர்.
கடற்கரை பகுதி அல்லது மலைப்பகுதியில் லாரி மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட எல்லைப்பகுதி போலீசாரும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
இதையடுத்து தீவிரவாதிகளின் குறியில் உள்ள முக்கிய நகரங்களில் ரகசிய கேமராக்கள் பொருத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ராஜா உசேனிடம் விசாரணை:
இந்து முன்னணி மதுரை தலைவர் ராஜகோபாலன் கொலை வழக்கில் தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் தீவிரவாதி ராஜா உசேன். இவருக்கும் அலி அப்துல்லாவும் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து ராஜா உசேனுக்கு வெடிகுண்டு சதித்திட்டத்தில் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே ராஜா உசேனிடமும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.