சுற்றுலா பயணிகள்-பணியாளர் மோதல்: கார், ஹோட்டல் சூறை
தென்காசி: குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கும், ஹோட்டல் பணியாளர்களுக்கும் ஏற்பட்ட தகராறில் காரும், ஹோட்டலும் அடித்து நொறுக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
குற்றாலத்தில் சீசன் தொடங்கியுள்ளதை அடுத்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வரத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் மதுரையிலிருந்து ஆண்டிச்சாமி என்பருக்கு சொந்தமான மாருதி ஆம்னி காரில் முனியாண்டிபாளையம் பகுதியை சேர்ந்த ஈஸ்வரன், முத்துகுமார், சதீஸ், குமார், பாலா ஆகியோர் குற்றாலம் வந்தனர்.
அப்போது பிரானூர் பார்டரில் பரோட்டா சாப்பிட அங்குள்ள கடைக்கு வந்தனர். வேலுச்சாமி என்பவரது ஹோட்டலில் சாப்பிட சென்றனர். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது சாப்பாடு பறிமாறியவர்களுக்கும், சாப்பிட்டவர்களுக்கும் இடையே திடீரென வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் இருதரப்பினரும் அடித்துக் கொண்டனர். ஆத்திரமடைந்த ஈஸ்வரன் கோஷ்டியினர் ஹோட்டலை சூறையாடினர். ஊழியர்கள் இசக்கி தேவர், செல்லப்பா, நமச்சிவாயம், கடை உரிமையாளர் வேலுச்சாமி ஆகியோரையும் தாக்கினர்.
இதைப் பார்த்த அப்பகுதியினர் சமரசம் செய்ய முயன்றனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து தாக்கியதால் ஆத்திரமடைந்த ஹோட்டல் ஊழியர்களும் அப்பகுதியினரும் ஈஸ்வரம் கோஷ்டியை அடித்து துவைத்தனர்.
அவர்கள் வந்த ஆம்னி காரையும் அடித்து நொறுக்கினர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். படுகாயமடைந்த இருதரப்பினரும்செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து செங்கோட்டை போலீசார் இரு தரப்பு மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.