காங்கோ: இந்திய வீரர்களிடம் 67 தீவிரவாதிகள் சரண்
டெல்லி: காங்கோவில் அமைதி காக்கும் குழுவில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்களிடம் 67 தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் சரணடைந்துள்ளனர்.
ஆப்பிரிக்க நாடான காங்கோ, உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. ரூவாண்டோ புரட்சிகர ஜனநாயக படைகள் என்ற அமைப்பு, ஆயுதம் ஏந்தி போராடி வருகிறது. இந்த அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற பலர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
காங்கோவில் ஐநா சார்பில் அமைதி காக்கும் குழு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. இதில், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு ராணுவ வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
ஆனால், அமைதி காக்கும் குழுவில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் மீது ஆயுத வர்த்தகத்தில் ஈடுபட்டதாகவும், தங்கம் கடத்தியதாகவும் புகார் கூறப்பட்டு வருகிறது.
இந் நிலையில், அமைதி காக்கும் குழுவில் உள்ள இந்திய வீரர்கள், பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி 67 பேரை சரணடைய வைத்து சாதனை படைத்துள்ளனர்.
ஆப்கானிலும் வெற்றி:
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தொடர்ந்து தாக்குதல்-கடத்தலில் ஈடுபட்டு வந்தாலும் அங்கு மேற்கொண்டிருந்த நெடுஞ்சாலைப் பணியை இந்தியா வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.
போரால் சீரழிந்த ஆப்கானிஸ்தான் நாட்டை, மறுசீரமைக்கும் பணியில் இந்தியாவும் செயல்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, அந்நாட்டின் தென்மேற்கு பகுதியில், சரஞ்ஜ்-தேலாராம் இடையே 218 கிலோ மீட்டர் நீளத்திற்கு நெடுஞ்சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டது. இந்த நெடுஞ்சாலை, இந்தியாவை மத்திய ஆசிய நாடுகளுடன் இணைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சாலை அமைக்கும் பணியை இந்தியர்கள் மேற்கொண்டிருந்தபோது, தலிபான் பயங்கரவாதிகள் பல முறை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல்களில், இந்தியர்கள் சிலர் உயிரிழந்தனர். சிலரை கடத்தியும் சென்றனர்.
இருந்தபோதிலும் சாலை அமைக்கும் பணி தொய்வின்றி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு முடிந்துள்ளது. இந்த சாலை விரைவில் ஆப்கன் அரசிடம் விரைவில் ஒப்படைக்கப்படவுள்ளது.