'வீடியோகான்': மகாராஷ்டிர முதல்வர்-அமைச்சர் மோதல்
மும்பை: மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் முதல்வர் விலாஸ்ராவ் தேஸ்முக், அவரது அவரது பரம எதிரியான அமைச்சர் நாராயண் ரானே இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது.
நவிமும்பை பகுதியில் வீடியோகான் நிறுவனம் எல்சிடி தொழிற்சாலை அமைக்க 250 ஏக்கர் நிலத்தை ஒதுக்கினார் விலாஸ்ராவ்.
இது தொடர்பாக தன்னுடனோ பிற அமைச்சர்களுடனோ முதல்வர் விவாதிக்கவில்லை என்றும், மார்க்கெட் விலையை விட மிக மிகக் குறைவான விலைக்கு இதை வீடியோகானுக்கு வழங்கியுள்ளதாகக் கூறி ராஜினாமா செய்யப் போவதாக மிரட்டியுள்ளார் ரானே.
ரூ. 3,000 கோடி மதிப்புள்ள நிலத்தை வெறும் ரூ. 300 கோடிக்கு தந்துள்ளார். இதைக் கூட வீடியோகான் தவணை முறையில் தான் தரப் போகிறதாம். இதனால் இந்த நில விற்பனையை ஏற்க முடியாது என்று கூறியுள்ள ரானே, நிலத்தை ஏலத்துக்கு விட வேண்டும் என்று கோரியுள்ளார்.
ஆனால், இந்த மோதலின் பின்னணியில் சில கார்போரெட் நிறுவனங்கள் இருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலத்தை குறி வைத்து தங்களுக்குக் கிடைக்காமல் போனதால் ராணே மூலமாக அரசுக்கே தொல்லை தரும் வேலைகளில் இந்த நிறுவனங்கள் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது.
அதே நேரத்தில், கடந்த ஒரு மாதத்தில் ராஜினாமா செய்யப் போவதாக ராணே மிரட்டுவது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.