நள்ளிரவில் வீடுகள் மீது விழுந்த கற்கள்-மக்கள் பீதி
சென்னை: சென்னை பெசன்ட் நகர் பகுதியில் நேற்று நள்ளிரவில் வீடுகள் மீது மர்மமான முறையில் கற்கள் வந்து விழுந்ததால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.
சென்னையில் ஏற்கனவே சைக்கோ கொலைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் பெசன்ட் நகர் ஓடை மாநகர் பகுதியில் நேற்று இரவு மர்ம கல்வீச்சு நடந்தது அப்பகுதியினரை பதீயடையச் செய்துள்ளது.
இங்குள்ள வீடுகள் மீது நேற்று இரவு திடீரென கற்கள்வந்து விழுந்தன. இதையடுத்து வெளியே வந்து பார்த்த மக்கள் யாரும் இல்லாததால், யாராவது விளையாட்டுத்தனமாக வீசியிருப்பார்கள் என நினைத்தனர். ஆனால் தொடர்ந்து சரமாரியாக கற்கள் வந்து விழுந்ததால் மக்கள் குழப்பமடைந்தனர்.
இதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் உருட்டுக்கட்டைகளுடன் தங்களது பகுதி முழுவதும் ரோந்து சென்றுயார் கல்வீசுவது என பார்த்தனர். ஆனால் யாரும் சிக்கவில்லை.
இந்த நிலையில் நள்ளிரவிலும் கற்கள் வந்து விழுந்ததால் மக்களிடையே பீதி ஏற்பட்டது. போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் வந்து பார்த்தபோது அவர்கள் மீதும் கற்கள் வந்து விழுந்தன.
இந்த மர்ம கல்வீச்சு காரணமாக ஓடை மாநகரில் வசிக்கும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்தனர்.