கொலைகளுக்கு 'சைக்கோ' காரணம் அல்ல - சென்னை கமிஷனர்
{image-chennai police250_07082008.jpg tamil.oneindia.com}சென்னை: சென்னையில் கடந்த சில வாரங்களாக உலுக்கி எடுத்து வரும் மர்மக் கொலைகளுக்கு சைக்கோ நபர்கள் யாரும் காரணம் அல்ல. 3 கொலைகளை ஒரு ரவுடிக் கும்பல் செய்திருப்பது தெரிய வந்துள்ளதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சேகர் தெரிவித்துள்ளார்.
சென்னை நகரில் சமீபத்தில் அடுத்தடுத்து 9 பேர் கொல்லப்பட்டனர். கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இந்த கொலைகள் நடந்ததால் சைக்கோ நபர்கள்தான் இதற்குக் காரணமாக இருக்க முடியும் என சந்தேகிக்கப்பட்டது.
இதையடுத்து போலீஸார் தீவிர நடவடிக்கையில் இறங்கினர். கொலைகள் நடந்து வந்த கே.கே.நகர், வடபழனி, அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு ரோந்து முடுக்கி விடப்பட்டது.
போலீஸாரின் தீவிர வேட்டையில் 3 கொலைகளுக்கு காரணமும், அதைச் செய்த குற்றவாளிகளும் சிக்கியுள்ளனர்.
இதுகுறித்து மாநகர காவல்துறை ஆணையர் சேகர் செய்தியாளர்களிடம் இன்று விளக்கினார். அவர் கூறுகையில், குமரன் நகர் பாட்சா உள்ளிட்ட 3 கொலைகளில் துப்பு துலங்கியுள்ளது. இந்தக் கொலைகளை 10 பேர் கொண்ட கும்பல் செய்துள்ளது. அதில் சுப்ரமணியம், நாகராஜ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களைத் தேடி வருகிறோம்.
இது ஒரு ரவுடிக் கும்பல் பல்வேறு திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளனர். அனைவரும் சேர்ந்து தினசரி இரண்டாவது ஆட்டம் சினிமாவுக்குச் செல்வார்கள். போய் விட்டு வரும்போது குத்துமதிப்பாக ஏதாவது ஒரு பகுதியைத் தேர்வு செய்து அங்கு ஆட்டோவில் செல்வார்கள்.
வழியில் தனியாக யாராவது தென்பட்டால் அவர்களைத் தாக்கி நகை, பணம் உள்ளிட்டவற்றைப் பறித்துக் கொண்டு தாக்கி விட்டு போய் விடுவார்கள். இப்படித்தான் பாட்சா உள்ளிட்ட 3 பேரை இக்கும்பல் கொன்றுள்ளது.
இந்தக் கொலைகளுக்கு சைக்கோ நபர்கள் காரணம் மீடியாக்களில் கூறப்பட்டிருந்தது. ஆனால் இதில் சைக்கோ நபர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. ரவுடிக் கும்பலின் தாக்குதல்தான் இவை அனைத்தும்.
இக்கும்பலைச் சேர்ந்த மற்றவர்களை தேடி வருகிறோம். அதேபோல மற்ற கொலைகளிலும் துப்பு துலங்கி வருகிறது. விரைவில் இக்கொலைகளுக்கு காரணமானவர்களையும் பிடிப்போம் என்றார் சேகர்.
சென்னை நகரில் நடந்த மர்மக் கொலைகளுக்கு சைக்கோ நபர்கள் யாரும் காரணம் இல்லை என்று ஆணையர் சேகர் கூறியிருப்பது இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது