டெல்டா மாவட்டங்களில் சன் தெரியவில்லை- மக்கள் புகார்
சென்னை: காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் சன் குழுமத்தின் சானல்கள் சரிவரத் தெரியவில்லை என்று புகார்பு எழுந்துள்ளது. சன் டிவியே இதற்குக் காரணம் அரசு கேபிள் டிவி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசின், அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு தஞ்சையை மையமாகக் கொண்டு ஜூலை15ம் தேதி தொடங்கப்பட்டது. 73 சானல்கள் இதில் ஒளிபரப்பாகின்றன. இவற்றில் 26 கட்டண சானல்கள் ஆகும். அரசு கேபிள் டிவி ஒளிபரப்பின் கீழ் சன் டிவி, சோனி, ஸ்டார் டிவி சானல்களை ஒளிபரப்ப அரசு முயன்று வருகிறது. ஆனால் இந்த நிறுவனங்கள் இதில் இடம் பெறாமல் தவிர்த்து வருகின்றன. இதையடுத்து இவற்றின் மீது அரசு நடவடிக்ைக எடுத்துள்ளது.
இந்த நிலையில், தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கடைகோடியில் வசிப்பவர்கள் சன் டிவி, கே.டிவி, சன் மியூசிக், சன் நியூஸ் ஆகிய சேனல்களை தெளிவாக பார்க்க முடியவில்லை என்று புகார் கூறுகிறார்கள்.
இதுகுறித்து அரசு கேபிள் டிவி நிறுவன தரப்பில் கூறுகையில், 60 நாட்களில் இந்த 4 சேனல்களின் ஒளிபரப்பை அவர்களும் பார்க்கும் வகையில் சன் டிவி நெட்வொர்க் ஏற்பாடு செய்ய வேண்டும். இதுதொடர்பாக நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.
இதன் பின்னரும் 4 சேனல்களின் ஒளிபரப்பை தெளிவாக சன் டிவி நெட்வொர்க் வழங்காவிட்டால் தொலைத்தொடர்பு தகராறு தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திடம் (டிராய்) முறையீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
தேவைப்படும் இடங்களில் தேஜா, ஜெமினி, சூர்யா, உதயா, உதயா மூவீஸ் போன்ற சேனல்கள் ஒளிபரப்பப்படும். திருநெல்வேலியில் உள்ள நுகர்வோர் சூர்யா அல்லது கிரண் டிவி ஒளிபரப்பு வேண்டுமென்று கேட்கிறார்கள். தமிழ்நாட்டில் சோனி டிவி அவ்வளவாக பிரபலம் இல்லை என்றாலும், ஸ்டார் விஜய் டிவி வேண்டும் என்று கேட்பதாகவும் அரசு கேபிள் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் வருகிற 15ம் தேதி முதல் கோவையில் ஒளிபரப்பை தொடங்க அரசு கேபிள் டிவி அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.