டெல்லியில் மாநில தலைமைச் செயலாளர்கள், டிஜிபிக்கள் கூட்டம்
டெல்லி: தீவிரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆராய அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், டிஜிபிக்கள் ஆலோசனைக் கூட்டம்டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
பெங்களூர், அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து சூரத் நகரில் அடுத்தடுத்து ஏராளமான வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. நாட்டின் பல நகரங்களுக்கும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் விடப்பட்டுள்ளன.
இதையடுத்து அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவது குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்க அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், டிஜிபிக்களின் கூட்டத்திற்கு மத்திய உள்துறை ஏற்பாடு செய்துள்ளது.
இக்கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள், உளவுத் தகவல்களை பரிமாறிக் கொள்வது, மாநில போலீஸாருக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படவுள்ளது.