ஸ்வீடனிலிருந்து மீண்டும் இந்தியா திரும்பினார் தஸ்லிமா
வங்கதேசத்தைச் ேசர்ந்த சர்ச்சைக்குரிய எழுத்தாளர் தஸ்லிமா அங்கிருந்து வெளியேறி கொல்கத்தாவில் தஞ்சம் புகுந்து தங்கியிருந்தார். இந்த நிலையில் அவருக்கு எதிராக கொல்கத்தாவில் போராட்டம் வெடித்ததால், அவர் ஜெய்ப்பூர் சென்றார். ஆனால் அங்கு வைத்திருக்க விரும்பாத ராஜஸ்தான் அரசு தஸ்லிமாவை டெல்லிக்கு அனுப்பி வைத்தது.
டெல்லியில் ரகசிய இடத்தில் மத்திய அரசின் பாதுகாப்புடன் தங்கியிருந்தார் தஸ்லிமா. கிட்டத்தட்ட வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதைப் போல அவர் பாதுகாப்புடன் இருந்தார். இதை வெறுத்த தஸ்லிமா, தான் கைதி போல இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் அவர் இந்தியாவிலிருந்து வெளியேறினார். அங்கிருந்து ஸ்வீடன் சென்ற அவர் கடந்த நான்கு மாத காலமாக அங்கேயே தங்கியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று மீண்டும் தஸ்லிமா இந்தியாவுக்குத் திரும்பினார். டெல்லி வந்து சேர்ந்த அவரை பாதுகாப்புப் படையினர் ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர் எங்கு தங்க வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.