For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுகவுடன் உறவை முறிக்க சிபிஐ, சிபிஎம் முடிவு?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: திமுகவுடனான உறவை முறித்துக் கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பான இறுதி முடிவு ஆகஸ்ட் 25ம் தேதி எடுக்கப்படுள்ளதாக இரு கட்சிகளின் மாநிலச் செயலாளர்களும் தெரிவித்துள்ளனர்.

மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு வழங்கி வந்த ஆதரவை இடதுசாரிகள் முறித்துக் கொண்டவுடனேயே, தமிழகத்திலும் திமுக ஆட்சிக்கு வழங்கிவரும் ஆதரவை இடதுசாரிகள் முறிக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால் தற்போதுள்ள நிலையே தொடரும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் வரதராஜன் தெளிவுபடுத்தினார். சில நாட்களுக்கு முன்பு முதல்வரை சந்தித்த அவர் அதே கருத்தையே செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்போது இடதுசாரிகளின் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் நடைபெற்ற சிபிஎம்மின் கூட்டத்திற்குப் பிறகு இந்த நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய வரதராஜன், காங்கிரஸ் கட்சியுடன் தொடர்பு வைத்திருக்கும் எந்தக் கட்சியுடனும் இடதுசாரிகள் தொடர்பு வைத்துக் கொள்ள மாட்டார்கள் என்று கூறியிருந்தார். இதனால் திமுகவுடனான உறவை இடதுசாரிக் கட்சிகள் முறித்துக் கொள்ளும் என்ற பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை வரதராஜனும், சிபிஐ செயலாளர் தா.பாண்டியனும் கூட்டாக சந்தித்தனர். அப்போது அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், கூட்டணி தொடர்பாக இரு கட்சிகளும் பூர்வாங்க ஆலோசனையை மேற்கொண்டன. இறுதி முடிவு ஆகஸ்ட் 25ம் தேதி எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றார்.

25ம் தேதி இறுதி முடிவு - வரதராஜன்

வரதராஜன் கூறுகையில், காங்கிரஸுடனும், பாஜகவுடனும் அல்லது அவர்களுடன் தொடர்பு வைத்துள்ள வேறு எந்தக் கட்சியுடனும் எங்களுக்கு எந்த வேலையும் இல்லை.

தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து தா.பாண்டியனுடன் ஆலோசனை நடத்தினேன்.

மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்ட பின்னர், காங்கிரஸ், பாஜக அல்லாத புதிய கூட்டணியை உருவாக்க இடதுசாரிகள் முடிவு செய்துள்ளன. அதில் எந்த மாற்றமும் இல்லை.

ஆகஸ்ட் 25ம் தேதி இரு கட்சிகளின் தலைவர்களும் கூடிப் பேசி இறுதி முடிவை எடுக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

தா.பாண்டியன் கூறுகையில், கூட்டணி தொடர்பாக எந்தவித கெடுவும் இல்லை. அரசியல் கெடுவுக்கு வாய்ப்பே இல்லை. இருக்கவும் முடியாது என்றார்.

அதிமுக மதவாத கட்சியல்ல - தா.பாண்டியன்

அதிமுகவுடன் கூட்டணி வருமா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், திராவிடக் கட்சிகளை நாங்கள் மதவாத கட்சிகளாக பார்க்கவில்லை என்றார் பாண்டியன்.

லோக்சபா தேர்தலுக்கு முன்பாகவே திமுக கூட்டணியிலிருந்து விலகி விட இடதுசாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணம், காங்கிரஸ் இடம் பெற்றுள்ள கூட்டணியில் இருந்தால், சீட் பகிர்வின்போது தர்மசங்கடமாக இருக்கும். சரியாக இருக்காது என்பதே.

மேலும் காங்கிரஸை கடுமையாக சாடிக் கொண்டு அவர்களுடன் கூட்டணியில் நீடிப்பதில் லாஜிக் இல்ைல என்பதும் இடதுசாரிகளின் எண்ணம். இதன் காரணமாகவே திமுக கூட்டணியிலிருந்து விலக இடதுசாரிகள் தீர்மானித்திருப்பதாக தெரிகிறது.

சிக்கலில் திமுக

ஏற்கனவே பாமகவை கூட்டணியிலிருந்து வெளியேற்றி விட்ட நிலையில், இடதுசாரிகளும் கூட்டணியிலிருந்து விலகினால் திமுக அரசுக்கு பெரும் சிக்கலாகி விடும்.

தற்போது சிபிஎம், சிபிஐ ஆகிய இரு கட்சிகளுக்கும் சட்டசசபையில் கூட்டாக 15 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்கள் விலகினால் காங்கிரஸை மட்டுமே திமுக முழுமையாக நம்பியிருக்கும் நிலை ஏற்படும். அப்படிப்பட்ட நிலை ஏற்பட்டால், காங்கிரஸிடமிருந்து வரும் கோரிக்கைகளை திமுகவால் நிராகரிக்க முடியாத இக்கட்டான நிலையும் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X