போராட்டத்திற்கும், தியாகங்களுக்கும் தயாராவோம்: அத்வானி
டெல்லி: மாபெரும் போராட்டத்திற்கும், தியாகங்களுக்கும் பாஜகவினர் தயாராக வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கூறியுள்ளார்.
டெல்லியில் நடந்த பாரதிய ஜனதா இளைஞர் அணி கூட்டத்தில் அவர் பேசுகையில், 1942ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி, வெள்ளையனே வெளியேறு என்ற முழக்கத்தை முழங்கினார். அது மட்டுமல்லாமல், இந்தியர்களைப் பார்த்து செய் அல்லது செத்து மடி என்றும் பிரகடனம் செய்தார்.
அந்த வாசகத்ைத இப்போது உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். நீங்கள் இந்த வாசகத்தை நினைவில் கொள்ள வேண்டும். போராட்டத்திற்கும், அதைத் தொடர்ந்து தியாகங்களுக்கும் தயாராக வேண்டும்.
55 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீருக்கு தனிக் கொடி, தனி சட்டம், தனி பிரதமர் என்று கேட்டார்கள். ஆனால் ஜன் சங் தலைவர் ஷியாமா பிரசாத் முகர்ஜி நடத்திய போராட்டத்தால், இன்று காஷ்மீரில் இந்திய தேசியக் கொடி பறக்கிறது. முகர்ஜி நடத்திய போராட்டத்தால்தான், தியாகத்தால்தான் இன்று முப்தி முகம்மது சயீத் அம்மாநிலத்தின் முதல்வராக வர முடிந்தது.
அன்று நடந்த போராட்டத்திற்கும், இப்போது அமர்நாத் விவகாரத்தில்
நடந்து கொண்டிருக்கும் போராட்டத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.
அமர்நாத் சங்கர்ஷ சமிதி எடுக்கும் முடிவுகளை பாஜகவினர் ஏற்க வேண்டும். அவர்கள் சரியான முறையில்தான் போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.
இது ஜம்மு சம்பந்தப்பட்டதல்ல, அமர்நாத் சம்பந்தப்பட்டதல்ல. நாட்டின் ஒருமைப்பாடு, இறையாண்மை சம்பந்தபப்ட்டது. இது நாட்டின் பிரச்சினை என்றார் அத்வானி.