நெல்லையப்பர் கோவிலில் நுழைந்த மர்ம நபரிடம் விசாரணை
நெல்லை: நெல்லையப்பர் கோயிலில் நுழைய முயன்ற சந்தேகத்திற்குரிய மர்ம நபரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
தீவிரவாதிகள் மிரட்டலை தொடர்ந்து நெல்லையப்பர் கோயிலில் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே இலங்கை அதிபர் ராஜபக்சேயின் தங்கையும், எம்பியுமான நிருபமா பக்சே கோயிலுக்கு வருவதாக இருந்தது. இதையொட்டி நெல்லையப்பர் கோயிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பக்தர்கள் பலத்த சோதனைக்கு பிறகே கோயிலின் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் காவி உடை அணிந்த 42 வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர் பெரிய தோல் பையுடன் கோயிலுக்குள் நுழைந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
விசாரணையில் அவர் பெயர் ராம்பாலக் மண்டல் என்பதும், நேபாளத்தில் இருந்து 4 பேருடன் புனித தலங்களுக்கு யாத்திரை வந்ததாகவும், மற்றவர்கள் அமர்நாத் கோயிலுக்கு சென்று விட்டதாகவும் தான் மட்டும் ராமேஸ்வரம் சென்றுவிட்டு வருவதாகவும் கூறினார்.
அவர் மீது சந்தேகமடைந்த போலீசார் மேல் விசாரணைக்காக அவரை அழைத்துச் சென்றனர்.