சென்னையில் பயங்கர ஆயுதங்களுடன் கூலிப்படையினர் கைது
சென்னை: சென்னையில் பயங்கர ஆயுதங்களுடன் 6 பேர் கொண்ட கூலிப் படையினரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னையில் இரவு முழுவதும் முக்கிய பகுதிகள், சாலைகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பு, ரோந்து மற்றும் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று அதிகாலை தேனாம்பேட்டை பகுதியில், போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த காரை நிறுத்தினர்.
காரில் 6 பேர் இருந்தனர். அனைவரும் செங்கல்பட்டிலிருந்து வருவதாக தெரிவித்தனர். காரில் உருட்டுக்கட்டைகள், வீச்சரிவாள், பிச்சுவாக் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன.
இதையடுத்து அனைவரையும் போலீஸார் கைது செய்தனர். அனைவரும் கூலிப் படையைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. கொலைத் திட்டத்துடன் அவர்கள் சென்னைக்கு வந்ததாக தெரிகிறது. யாரைக் கொல்லும் திட்டத்துடன் அவர்கள் வந்தனர் என்பதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.