'கெடு டார்ச்சர்' சிபு சோரன் முதல்வராகிறார்!
சோரனுக்கு ரயில்வே அமைச்சரும் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவருமான லாலு பிரசாத் யாதவும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஜார்க்கண்ட் முதல்வர் கோடாவை ராஜினாமா செய்யுமாறு காங்கிரஸ் கூறியுள்ளதாகத் தெரிகிறது.
இப்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் மது கோடா முதல்வராக உள்ளார். சுயேச்சையான இவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம் மற்றும் சில சுயேச்சைகளின் ஆதரவுடன் முதல்வராக உள்ளார்.
3 வாரங்களுக்கு முன் மக்களவையில் மத்திய அரசி்ன் மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தபோது 5 எம்.பிக்களை கொண்ட சிபுசோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அரசுக்கு ஆதரவு தர நிபந்தனை விதித்தது.
தனக்கு மத்திய அமைச்சர் பதவி அல்லது ஜார்க்கண்ட் மாநில முதல்வர் பதவி வேண்டும் என நிபந்தனை விதித்தார் சோரன்.
அதை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டதையடுத்து அவர் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தார். இதையடுத்து அவரை அத்தோடு மறந்துவிட்டது காங்கிரஸ்.
ஆனால், தனக்கு உடனடியாக ஜார்க்கண்ட் முதல்வர் பதவி தர வேண்டும் என்று நச்சரித்து வந்தார் சிபு. அதை காங்கிரஸ் கண்டு கொள்ளாததால் இன்று சோனியா காந்தியை நேரில் சந்தித்து 24 மணி நேர கெடு விதித்தார்.
முதல்வர் பதவியை தராவிட்டால் ஜார்க்கண்டில் ஆட்சியைக் கவிழ்ப்பேன் என மிரட்டியுள்ளார். கூட்டணியில் இருந்து கழன்று, சில சுயேச்சைகளையும் வளைத்துக் கொண்டு, பாஜக கூட்டணியில் சேர்ந்தால் சிபுவால் அரசு அமைக்க முடியும்.
இதைத் தவிர்க்க லாலு முயன்று வருகிறார். அவருக்கு முதல்வர் பதவியை தருமாறு காங்கிரசுக்கு லாலுவும் நெருக்கடி தந்துள்ளார். அதே நேரத்தில் சுயேச்சைகளின் ஆதரவைப் பெற வேண்டியது சோரனின் பொறுப்பு என்றும் லாலு கூறிவிட்டார்.
இதையடுத்து மது கோடாவை ராஜினாமா செய்யுமாறு காங்கிரஸ் கூறியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் சிபு எந்த நேரத்திலும் முதல்வராகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
கோடா சில சுயேச்சைகளைக் கூட்டிக் கொண்டு பாஜக பக்கம் போய்விடாமல் தடுக்க அவருக்கு முக்கியமான பதவி ஏதாவது தரப்படலாம் எனத் தெரிகிறது.