விமானநிலையத்தில் வயர்களுடன் 'பேக்'- பீதி
சென்னை: சென்னை விமான நிலையத்தில் வயர்களுடன் அனாதரவாக கிடந்த பையால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அதில் யாரோ சிலர் வேண்டும் என்றே வயர்களைப் போட்டு வைத்து பீதியை ஏற்படுத்தியுள்ளனர் என்பது பின்னர் தெரிய வந்தது.
விமான நிலைய அண்ணா பன்னாட்டு முனைய போர்ட்டிகோ பகுதியில், ஒரு மர்மப் பை கிடந்தது. அதிலிருந்து வயர்களும் நீட்டிக் கொண்டிருந்தன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பாதுகாப்புப் படையினர்உஷார்படுத்தப்பட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களுடன் விரைந்து வந்தனர்.
அவர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் அந்தப் பையை அவர்கள் பிரித்து பார்த்தபோது வெறும் வயர்களும், ஒரு இயந்திரப் பகுதியும் இருந்தது தெரிய வந்தது.
யாரோ வேண்டும் என்றே இதை செய்திருப்பதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதைச் செய்து விமான நிலையத்தை பீதிக்குள்ளாக்கிய நபர் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த பையால் விமான நிலையத்தில் ஒரு மணி நேரத்திற்குப் பெரும் பரபரப்பு நிலவியது.