ரகளை: 4 பா.ம.க. எம்.எல்.ஏக்கள் மீது வழக்கு
ஓமலூர்: சேலம் மாவட்டம் ஓமலூரில் நடந்த பாமக பொதுக்கூட்டத்தில் ரகளையில் ஈடுபட்டதாக கூறி நான்கு பாமக எம்.எல்.ஏக்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஓமலூர் பஸ் நிலையத்தில் 2 நாட்களுக்கு முன்பு பா.ம.க. சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. அப்போது, திடீரென ஒரு கும்பல் பா.ம.க. கொடிகளையும், டியூப் லைட் விளக்குகளையும் அடித்து நொறுக்கியது. கூட்ட மேடை அருகே கற்களும் வந்து விழுந்தன.
இதைக் கண்டித்து பா.ம.க. சார்பில் அங்கு சாலை மறியல் நடத்தப்பட்டது. அந்த மறியலை கலைக்க முயன்றபோது நடந்த தள்ளு முள்ளு சம்பவத்தில் 3 போலீசார் காயம் அடைந்தனர். டி.எஸ்.பி. லெனின் கார் கண்ணாடி உடைந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக ஓமலூர் நகர பா.ம.க. செயலாளர் ராஜேந்திரன், போலீஸில் புகார் கொடுத்தார்.
அதில், தி.மு.கவைச் சேர்ந்த ரவிச்சந்திரன், கோட்டகவுண்டன்பட்டி சீனி, கீழ்காமாண்டப்பட்டி மகேந்திரன், பெரியேரிப்பட்டி குப்புசாமி உள்பட 10 பேர் பா.ம.க. பொதுக் கூட்டத்தில் எங்களை பார்த்து நாங்கள் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள், உங்களை கொல்லாமல் விடமாட்டோம் என்று மிரட்டி கொடிகளையும் மின் விளக்குகளையும் உடைத்து நொறுக்கினர் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து தி.மு.க. நகர செயலாளர் ரவிச்சந்திரன், உள்பட 10 பேர் மீது ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பதிலுக்கு திமுக ஒன்றிய செயலாளர் போத்தன் போலீஸில் ஒரு புகார் கொடுத்தார்.
அதில், ஓமலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் தமிழரசு, கண்ணையன், காவேரி, வேல்முருகன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சண்முகம், பா.ம.க. இளைஞர் அணி அருள் ஆகியோர் கூட்டம் நடந்தபோது, 100 பேர் கடப்பாறை மற்றும் உருட்டுக்கட்டையுடன் வந்து தி.மு.கவை சேர்ந்த நகர செயலாளர் ரவிச்சந்திரன், பிரகாஷ், பெரியசாமி ஆகியோரை மிரட்டியும் கடைகளில் பொருட்களை அடித்து நொறுக்கியும் உடைத்தனர்.
சிவக்குமாரின் தங்க செயினையும் பறித்தனர் என்று புகாரில் அவர் கூறியிருந்தார்.
இந்தப் புகாரின் பேரில், எம்.எல்.ஏக்கள் தமிழரசு, கண்ணையன், காவேரி, வேல்முருகன், மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம் ஆகியோர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.