13 சதவிகித பணவீக்கம்! -ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் எச்சரிக்கை
டெல்லி: பணவீக்கம் இப்போதைக்கு குறைய வாய்ப்பில்லை, அதிகரிக்கத்தான் செய்யும். விரைவில் 13 சதவிகிதத்தை எட்டும், ஆனால் நாட்டின் மொத்த உற்பத்தி 7.7 சதவிகிதமாகக் குறைந்துவிடும் என எச்சரித்துள்ளார் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரும், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவருமான சி.ரங்கராஜன்.
இந்தியப் பொருளாதாரத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பொருட்களின் விலைகள் விண்ணைத் தொடும் வேகத்தில் உயர்ந்து வருகின்றன. இதனால் பணவீக்கம் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத மிக அதிகபட்ச அளவான 12 சதவிகித்தைத் தாண்டியுள்ளது.
அதே நேரம் நாட்டின் மொத்த உற்பத்தி மற்றும் வளர்ச்சி குறையத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் விலை நிலைகளைக் கட்டுக்குள் கொண்டு வந்து புதிய பொருளாதார சீரமைப்பில் தீவிர கவனம் செலுத்த முடிவு செய்துள்ள பிரதமர் அதற்கான பரிந்துரைகளைத் தருமாறு பொருளாதார ஆலோசனைக் குழுவைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்னொரு பக்கம் பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வர வங்கி இருப்பு விகிதம், வட்டி விகிதம் இரண்டையுமே முன்னெப்போதுமில்லாத அளவுக்கு 9 சதவிகிதமாக அதிகரித்துள்ளது ரிசர்வ் வங்கி.
இவ்வளவு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், உடனடியாக பணவீக்கம் குறைய வாய்ப்பில்லை என்கிறார் ரங்கராஜன்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், 'பணவீக்கத்தைக் குறைக்க ரிசர்வ் வங்கியின் இப்போதைய பணக் கொள்கை சரியானதே. ஆனால் இது உடனடியாகப் பலனைத் தரும் என்று கூறுவதற்கில்லை. எப்படியும் விரைவில் 13 சதவிகிதம் என்ற அதிகபட்ச உயர்வை எட்டப் போகிறது பணவீக்கம்.
அதே நேரம் இப்போது ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அளவான 8 சதவிகித பொருளாதார வளர்ச்சியை அடைவது சிரமம்தான். 7.7 சதவிகிதம் அளவுக்குதான் வளர்ச்சி இருக்கும். இந்தியாவின் பொதுக் கடன் மற்றும் பற்றாக்குறையின் அளவும்கூட இந்த ஆண்டு அதிகரிக்கத்தான் செய்யும், என்றார் ரங்கராஜன்.
சமீபத்தில்தான் தனது பொருளாதார ஆலோசனைக் குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக, பிரதமரிடம் கடிதம் கொடுத்துள்ளார் ரங்கராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.