மேட்டூருக்கு அபரிமித நீர் வரத்து
திருச்சி: மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அபரிமிதமாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
கர்நாடகத்தில் கன மழை பெய்து வருவதால் அங்கிருந்து பெருமளவிலான தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர் வேகமாக மேட்டூருக்கு வந்து கொண்டுள்ளது.
நேற்று மாலை விநாடிக்கு 14 ஆயிரம் கன அடி நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருந்தது. இன்று காலை அது 17 ஆயிரத்து 707 கன அடியாக உயர்ந்துள்ளது. இன்று மாலைக்குள் இது 30 ஆயிரம் கன அடியாக உயரும் என எதிர்பாக்கப்படுகிறது.
தற்போது அணையின் நீர்மட்டம் 60.35 அடியாக உள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 13 ஆயிரத்து 8 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.
கர்நாடகத்தில் வெள்ள எச்சரிக்கை:
இதற்கிடையே கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக கிருஷ்ணசாகர் அணையில் நீர் நிரம்பி வழிகிறது. அணை எப்போது வேண்டுமானாலும் திறந்துவிடப் படலாம் என்றும் காவிரியில் வெள்ள பெருக்கு ஏற்படும் என்றும் காவிர் நீர்த்தேக்க அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ண சாகர் அணையின் மொத்த நீர்மட்டம் 123.60ஐ தொட இன்னும் ஒரு அடி மட்டுமே குறைவாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 50,000 கன அடி நீர் வெளியேற்றப்படும் என்று தெரிகிறது. எனவே காவிரி படுகையில் வாழும் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லும்படி எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல கபினி அணையில் இருந்து வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தண்ணீர் அபாய குறியை நெருங்கி வருவதாகவும், கபிலா நதிக்கரையில் வசிக்கும் மக்களை வெளியேறும் படியும் எச்சரிக்கப்பட்டுள்ளது. விநாடிக்கு 30,535 கன அடி நீர் வெளியேற்றப்பட உள்ளதாக தெரிகிறது.
அணையின் மொத்த கொள்ளளவான 2284 அடியை தொட ஒரு அடி மட்டுமே நீர் குறைவாக உள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை பெய்து வருவதால் கபினியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. குடகு மாவட்டத்தில் பெய்து வரும் ஹாரங்கி அணைக்கும் அதிகளவில் நீர் வந்து கொண்டிருக்கிறது.