விமானத்தில் சில்மிஷம் - ஜோசப் வழக்கில் செப். 16 முதல் விசாரணை
கடந்த 2006ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையிலிருந்து கொச்சிக்கு கிங்பிஷர் விமானம் மூலம் சென்றார் லட்சுமி கோபகுமார். அப்போது அவரது இருக்கைக்குப் பின் இருக்கையில், பி.ஜே.ஜோசப் அமர்ந்திருந்தார். விமானம் பறக்கத் தொடங்கிய பின்னர் லட்சுமி கோபகுமாரின் இடுப்பைப் பிடித்து ஜோசப் கிள்ளி சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக லட்சுமி கோபகுமார் மீனம்பாக்கம் போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸார் ஜோசப் மீது புகார் பதிவு செய்து ஆலந்தூர் கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்தனர்.
கடந்த 2 ஆண்டுளாக நடந்து வரும் இந்த வழக்கில், செப்டம்பர் 16ம் தேதி முதல் விசாரணைகள் தொடங்கவுள்ளன என்று நீதிபதி ராமநாதன் அறிவித்துள்ளார்.
வழக்கில் சாட்சி சொல்ல வருமாறு லட்சுமி கோபகுமார் உள்ளிட்ட நான்கு சாட்சியங்களுக்கும் அவர் சம்மன் அனுப்பியுள்ளார். லட்சுமி கோபகுமார் தவிர அவரது கணவர் கோபகுமார், விமான கமாண்டர் ஷாஜி மகாதேவன், கேப்டன் சாமுவேல் கோகலே ஆகியோரும் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த விவகாரம் குறித்து ஐ.ஜி. சந்தியா மூலம் நடத்திய விசாரணையின் அறிக்கையையை தாக்கல் செய்யுமாறு கேரள அரசுக்கும் நீதிபதி ராமநாதன் உத்தரவிட்டார்.