ராமதாஸ் கண்களுக்கு எல்லாம் மஞ்சள்-பொன்முடி
நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் உயர் கல்வித்துறை சரியாக செயல்படவில்லை என்று டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். காமாலை நோய் கண்டவருக்கு கண்டதெல்லாம் மஞ்சளாக தெரியும். அது போலதான் இதுவும்.
கடந்த அதிமுக ஆட்சியில் 2005ம் ஆண்டு என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசு ஒதுக்கீடு 40,000 ஆகும். ஆனால் கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள் எண்ணிக்கை 32,288 தான்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதால் 2006ம் கல்வியாண்டில் 42,344 மாணவர்களும், 2007ம் கல்வியாண்டில் 56,041 மாணவர்களும், 2008ம் கல்வியாண்டில் கடந்த 11ம் தேதி வரை 54,000 மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
வரும் 20ம் தேதி வரை நடைபெறும் கவுன்சிலிங்கில் கூடுதலாக 25,000 மாணவர்கள் சேர வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு மொத்த மாணவர்கள் சேர்க்கையில் அரசு ஒதுக்கீடு 80,081 இடங்கள்.
2005ம் ஆண்டில் 4,770 தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டின் கீழ் கல்லூரிகளில் சேர்ந்தனர். ஆனால் 2007ம் கல்வியாண்டில் 8,175 பேரும், 2008ம் கல்வியாண்டில் இதுவரை 5,210 மாணவர்களும் சேர்ந்துள்ளனர்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோரில் அரசு ஒதுக்கீட்டில் 2005ம் ஆண்டில் 6,085 பேரும், ஆனால் 2007ம் கல்வி ஆண்டில் 11,0 45 மாணவர்களும், 2008-ம் கல்வியாண்டில் கடந்த 11ம் தேதிவரை 11,022 மாணவர்களும் சேர்ந்துள்ளனர். இது இரு மடங்கு உயர்வாகும்.
அரசு கலைக் கல்லூரிகளில் ஷிப்டு முறை, கட்டணம் ரத்து, இலவச பஸ் பாஸ்கள் மூலம் மாணவர்கள் பெரும் பயனடைந்துள்ளனர். இந்த ஆண்டு புதிதாக 7 அரசு கலை கல்லூரிகளும், 6 அரசு என்ஜினீயரிங் கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ளன.
கடந்த 2 ஆண்டுகளில் கல்வி கூடங்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் கல்வி கட்டணம் குறைந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலைக் கல்லூரிகளிலும் புதிதாக கட்டிடங்கள் கட்ட ரூ. 50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
கேள்வி: விழுப்புரத்தில் அமையவுள்ள அரசு பொறியியல் கல்லூரிக்கான இடம் சரியில்லை என்றும், பாமகவினரிடம் இதற்கான தகுந்த இடமிருந்தால் அளித்திருப்பார்கள் என்றும்,
மேலும் உங்கள் மகன் கட்டும் என்ஜினீயரிங் கல்லூரியிலேயே இந்த அரசு என்ஜினீயரிங் கல்லூரியைத் தொடங்கலாம் என்றும் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளாரே?
பொன்முடி: திண்டிவனத்தில் அமைய உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரிக்கு அவர்கள் (ராமதாஸ் தரப்பு) கட்டி வரும் என்ஜினீயரிங் கல்லூரியில் இடம் தந்தால் நான் கொடுக்க தயாராக உள்ளேன் என்றார்.