குற்றாலம் சாரல் விழாவில் குத்தாட்டம்-அதிர்ச்சி!
குற்றாலத்தில் சாரல் திருவிழா 3ம் நாள் நிகழ்ச்சி நேற்று இரவு கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு நெல்லை மாநகராட்சி ஆணையர் மோகன் தலைமை வகித்தார். மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் திருமலையப்பன், மாவட்ட சுற்றுலா அதிகாரி செல்லப்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் சென்னை வாணி கலைக்குழுவினரின் நடனங்கள், சித்டமால் நடனங்கள், தங்கராஜ் குழுவினரின் நாட்டுபுற நிகழ்ச்சி, ஆகியவை நடைபெற்றன.
அப்போது ஒரு கலைக்குழுவைச் சேர்ந்த கலைஞர்கள் திடீரென மாம்பழமாம்..மாம்பழம்..மல்கோவா மாம்பழம் என்ற பாடலுக்கு அபிநயம் பிடித்து அட்டகாசமான குத்தாட்டத்தைப் போட ஆரம்பித்தனர்.
இதை எதிர்பாராத அதிகாரிகள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து முகம் சுளித்தனர். அந்த அளவுக்கு ஆட்டத்தில் ஆபாசம் இருந்தது.
இதைத் தொடர்ந்து மாம்பழப் பாட்டு முடிந்தவுடன் அந்த குழுவுக்கு வாய்ப்பாளிக்காமல் வேறு குழுவுக்கு நிகழ்ச்சி நடத்திட அனுமதி அளிக்கப்பட்டது.