ராஜா வழக்கு-3 பேருக்கான ஜாமீனை ரத்து செய்ய பழனிச்சாமி கோரிக்கை
ஈரோடு: முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி ராஜா மீதான ஹேபியஸ் கார்பஸ் வழக்கில் 3 பேருக்கு அளிக்கப்பட்டுள்ள முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி அவரால் மிரட்டப்பட்டதாக கூறப்படும் ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பழனிச்சாமி, அவரது மனைவி மலர்விழி, அவர்களது மகன் சிவபாலன் ஆகியோரை அமைச்சர் ராஜா ஆட்களை வைத்துக் கடத்தி, சொத்தைக்கேட்டு மிரட்டியதாக சர்ச்சை எழுந்தது.
இது தொடர்பாக பழனிச்சாமியின் மருமகனான இளங்கோவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம் ராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ராஜா அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் சுந்தரராஜன், சம்பத்குமார், சுந்தரம் ஆகிய 3 பேரும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த உயர்நீதிமன்றம் 3 பேருக்கும் முன்ஜாமீன் அளித்தது.
இந்தச் சூழ்நிலையில் இந்த முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி பழனிச்சாமி மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், எனது நிலத்தை அபகரிக்க முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா தூண்டுதலின் பேரில் அவருடைய ஆட்கள் என்னையும், என் மனைவி, மகன் ஆகியோரையும் கடத்திச் சென்றனர்.
இந்த வழக்கில் சுந்தரராஜன், சம்பத்குமார், சுந்தரம் ஆகிய 3 பேர் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளனர். இதை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.