ஆக-17ல் சந்திர கிரகணம்-வெறும் கண்களால் பார்க்கலாம்
டெல்லி: வரும் 17ம் தேதி சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அதிகாலை ஏற்படும் இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்த்து ரசிக்கலாம்.
சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் பூமி வரும்போது, பூமியின் நிழல் சந்திரன் மீது விழும். அதுதான் சந்திர கிரகணம். வரும் 17ம் தேதி சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
இந்தியாவில் இது பகுதி சந்திர கிரகணமாக இருக்கும். சூரிய கிரகணம் போல் இல்லாமல், சந்திர கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கலாம். இதனால் கண்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை.
17ம் தேதி அதிகாலை 1:06 மணிக்குத் தொடங்கி 4:14க்கு முடிகிறது. 80 சதவீதம் மட்டுமே சந்திர கிரகணம் ஏற்படும். 2:40 மணிக்கு சந்திர கிரகணம் ஓரளவுக்கு முழுமையாக, அதாவது 80 சதவீதம் ஏற்படும். இதை அனைவரும் கண்டு ரசிக்கலாம் என்று டெல்லியில் உள்ள நேரு கோளரங்க இயக்குனர் ரத்னஸ்ரீ தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது: ஆசியா, தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா கண்டங்களில் முழுமையாக கிரகணத்தை கண்டு ரசிக்க முடியும்.
16ம் தேதி மாலை சந்திரோதயத்தின்போது தென் அமெரிக்காவிலும், 17ம் தேதி சந்திர அஸ்தமனத்தின்போது ஆஸ்திரேலியாவிலும் கிரகணத்தை பார்க்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, ஆடி மாதத்திலேயே சூரிய கிரகணமும், சந்திர கிரகணமும் ஏற்படுவதால், மழை, நிலநடுக்கம் போன்றவை ஏற்படும். அரசியலில் குழப்பங்கள் நிலவும் என்று ஜோதிடர்கள் பீதியைக் கிளப்பியுள்ளனர்.