ஐ.நா. அலுவலகம் நோக்கி ஹூரியத் பேரணி
ஸ்ரீநகர்: காஷ்மீரில் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து புகார் அளிப்பதற்காக ஹூரியத் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில், ஸ்ரீநகரில் உள்ள ஐ.நா. ராணுவ கண்காணிப்பாளர்கள் அலுவலகம் நோக்கி பேரணி நடத்தப்பட்டது.
அமர்நாத் விவகாரம் தொடர்பாக ஜம்முவிலும், ஸ்ரீநகரிலும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மாறி மாறி போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பெருமளவில் ஸ்தம்பித்துப் போயுள்ளது.
இந்த நிலையில், ஸ்ரீநகரில் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. ராணுவ கண்காணிப்பாளர்கள் அலுவலகத்தில் புகார் கொடுக்க ஹூரியத் ஆதரவு ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்தது.
இதையடுத்து இன்று காலை பேரணி தொடங்கியது. ஐ.நா. அலுவலகம் அருகே இந்தப் பேரணி தொடங்கியது. லாரி மற்றும் பஸ்களில் ஆயிரக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்றனர்.
பேரணியின்போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் காஷ்மீர் பிரச்சனையில் உலக நாடுகள் தலையிட வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.
இந்த பேரணியல் வன்முறை சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. பேரணியையொட்டி மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. யாரும் கைது செய்யப்படவில்லை.
மேலும் கூட்டத்தினர் அத்துமீறினால் அவர்களை குறைந்த சக்தியைக் கொண்டு கலைக்குமாறு பாதுகாப்புப் படையினருக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது. குறிப்பாக துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டாம் எனவும் பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதற்கிடையே, அமர்நாத் சங்கர்ஷ் சமிதி, தனது போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. சிறை நிரப்பும் போராட்டத்தையும் அது அறிவித்துள்ளது.
இன்று முதல் 3 நாட்களுக்கு இந்த சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் எனவும் அது அறிவித்துள்ளது.
இதேபோன்ற சிறை நிரப்பும் போராட்டத்தை ஆகஸ்ட் 21ம் தேதியன்று நடத்தப் போவதாக ஏற்கனவே பாஜகவும் அறிவித்துள்ளதால் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் பரபரப்பாகவே உள்ளது.