ஸ்டேட் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்-பணிகள் பாதிப்பு
டெல்லி: பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்களின் ஒரு நாள் வேலைநிறுத்தத்தால் நாடு முழுவதும் இன்று ஸ்டேட் வங்கி பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது.
செளராஷ்டிரா வங்கியை பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு ஸ்டேட் வங்கி ஊழியர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
அரசின் முடிவை எதிர்த்து பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் மற்றும் அதன் கிளை வங்கிகளின் ஊழியர்கள் கிட்டத்தட்ட 1 லட்சத்திற்கு மேற்பட்டோர் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் நாடு முழுவதும் ஸ்டேட் வங்கிகளில் பணிகள் பாதிக்கப்பட்டன. தமிழகத்திலும் ஸ்டேட் வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் ஊழியர்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த ஸ்டிரைக்கில் ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் ஆகியவையும் பங்கேற்றுள்ளன.