நேரடி 'பீட்'-அரசு கேபிளுக்கு ஆபரேட்டர்கள் கோரிக்கை
கோவை: எந்தவித எம்.எஸ்.ஓ மூலமும் தராமல், நேரடியாக அரசு கேபிள் டிவி நிறுவனத்திலிருந்தே சிக்னல்கள் அளிக்கப்பட வேண்டும் என கோவை மாவட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அரசு கேபிள் டிவி கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பிரிஜேஷ்வர் சிங்குக்கு விடுத்துள்ள கோரிக்கை தீர்மானத்தில், கோவை மாவட்டத்தில் 400க்கும் மேற்பட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அரசு கேபிள் டிவி மூலம் சானல்களை ஒளிபரப்ப ஆர்வமாக உள்ளனர்.
இருப்பினும் அரசு கேபிள் டிவி நிறுவனத்திலிருந்து நேரடியாக சிக்னல்களை பெறவே விரும்புகிறோம். இடையில் எந்தவித எம்.எஸ்.ஓவும் இதில் இடம் பெறக் கூடாது என்று கோரிக்கை விடுக்கிறோம்.
தற்போது சிக்னல்களை வழங்குவதற்காக அரசு கேபிள் டிவி கழகம் தேர்ந்தெடுத்துள்ள எம்.எஸ்.ஓ. நிறுவனத்தினர், மற்ற கேபிள் டிவி ஆபரேட்டர்களை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபடக் கூடும்.
எனவே இந்த நிலையில் சிக்காமல்தவிர்க்க அரசே நேரடியாக சிக்னல்களை வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.