மூப்பனார் பிறந்த நாள்-தனித் தனி கொண்டாட்டம்
சென்னை: மறைந்த தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனர் ஜி.கே.மூப்பனாரின் 77வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னையில் மூப்பனாரின் ஆதரவாளர்கள் ஜி.கே.வாசன் தலைமையிலும், காங்கிரஸ் அலுவலகத்தில் தங்கபாலு தலைமையிலும் தனித் தனியாக கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மறைந்த மூப்பனாருக்கு இன்று 77வது பிறந்த நாளாகும். இதையொட்டி தமிழக காங்கிரஸ் அலுவலகத்தில் அவரது படத்திற்கு கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். சுதர்சனம் உள்ளிட்ட தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல மூப்பனாரின் மகனும், மத்திய அமைச்சருமான ஜி.கே.வாசன் தலைமையில் தனியாக ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல புதுச்சேரியிலும், மூப்பனார் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் ராதாகிருஷ்ணன், பாமக தலைவர் பேராசிரியர் ராமதாஸ், புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரப்பாலத்தில் உள்ள மூப்பனார் சிலைக்கு மாலை அணிவித்தார்.
காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஏ.வி.சுப்ரமணியம் உள்ளிட்டோர் மூப்பனார் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.