செய்வினை வைத்ததாக கூறி முதியவர் கொலை
உடன்குடி: தூத்துக்குடி அருகே செய்வினை வைத்ததாக கூறி முதியவர் படுகொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி மெஞ்ஞானபுரம் அடுத்த கல்விளையைச் சேர்ந்தவர் புலமாடன், கூலி தொழிலாளி. இவரது மனைவி பேச்சியம்மாள். அதேபகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது அக்கா புலமாடன் வீட்டுக்கு அருகில் வசித்து வருகிறார். இவரது மகள் பெருமாள், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கருப்பசாமி அடிக்கடி குடித்துவிட்டு வந்து புலமாடனிடம் தகராறு செய்தார். எனது அக்கா மகள் நடக்க முடியாமல் இருப்பதற்கு நீதான் காரணம். அவளுக்கு நீதான் செய்வினை வைத்துவிட்டாய் என்று கூறி புலமாடனிடம் தகராறு செய்து வந்தார்.
இந்நிலையில் வழக்கம்போல் குடிபோதையில் இருந்த கருப்பசாமி, தனது அவரது மனைவி கலாவுடன் சேர்ந்து புலமாடன் வீட்டுக்கு சென்று தகராறு செய்தனர். அப்போது புலமாடனுக்கும் கருப்பசாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த கருப்பசாமி தான் வைத்திருந்த அரிவாளால் புலமாடனை சராமரியாக வெட்டினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த புலமாடன் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.