சென்னையில் மீண்டும் பெட்ரோல்-டீசல் பற்றாக்குறை
சென்னை: சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரை நிலை குலைய வைத்த பெட்ரோல், டீசல் பஞ்சம்மறுபடியும் திரும்பியுள்ளது. நேற்று முதல் பெட்ரோல், டீசலுக்குப் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பல பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் பெட்ரோல், டீசலுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. விலை அதிகமான பிரீமியம் வகை பெட்ரோல் மட்டுமே விற்கப்பட்டது. சாதாரண வகை பெட்ரோல், டீசல் அறவே நிறுத்தப்பட்டது. பின்னர் பிரீமியம் வகை பெட்ரோல், டீசலும் கூட நின்று போனது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் இந்த நிலை காணப்பட்டது.
இந்த நிலையில்,நேற்று மீண்டும் பெட்ரோல், டீசல் பஞ்சம் சென்னைக்குத் திரும்பியுள்ளது. நேற்று காலை முதல் பல விற்பனை நிலையங்களில் ஸ்டாக் இல்லை என்று கூறி கயிற்றைக் கட்டி மூடி விட்டனர். இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மாலை வாக்கில் பல பெட்ரோல் விற்பனை நிலையங்களில் ஸ்டாக் இல்ைல என்ற வாசகம் காணப்பட்டது. இதனால் மீண்டும் பெட்ரோல், டீசல் பஞ்சம் திரும்பி விட்டதோ என்று மக்கள் அஞ்சுகின்றனர்.
சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் பாதிக்கும் மேலான பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. போதிய சப்ளை இல்லை என்று பெட்ரோல் விற்பனை நிலையங்களில் காரணம் கூறப்படுகிறது. சப்ளை வந்தால்தான் விநியோகம் சுமூகமாக இருக்கும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
இதன் காரணமாக திறந்திருக்கும் ஓரிரு பெட்ரோல் நிலையங்களில் பெருமளவில் கூட்டம்காணப்படுகிறது. திடீரென பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டதால் பெட்ரோல், டீசல் தீர்ந்து போன வாகனங்கள் சாலைகளில் ஆங்காங்கே தேக்கமடைந்து காணப்பட்டது.